ஐயா, இதில் மூன்று முட்டைகள் உள்ளன

அமெரிக்காவில் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்துக்கு தொலைபேசி கேபிள் பதிக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது.
சாலையின் ஒரு ஓரமாய் கால்வாய் போலக் குழி தோண்டிக் கொண்டு சென்றார்கள். அப்போது குழி செல்லும் பாதையில் ஒரு மரம் குறுக்கிடவே, மேலதிகாரி பணியாளர்களிடம் அம்மரத்தை வெட்டி வீழ்த்த உத்தரவிட்டார்
அம்மரத்தின் மேல் ஒரு குருவிக் கூடு இருப்பதைப் பார்த்த ஒரு பணியாளர், அதை அந்த அதிகாரியிடம் தெரிவிக்க, அவர் அப்பணியாளரை மரத்தின் மேல் ஏறி் கூட்டைப் பரிசோதிக்கச் சொன்னார். மேலே ஏறி கூட்டைப் பார்த்த பணியாளர்: “ஐயா, இதில் மூன்று முட்டைகள் உள்ளன” என்று மேலிருந்து குரல் கொடுத்தார்.க்க,
உடனே அந்த அதிகாரி: இப்போதைக்கு மரத்தை வெட்ட வேண்டாம், மரத்தைத் தாண்டி குழி எடுப்பதைத் தொடரலாம், கடைசியாக மீண்டும் இப்பகுதிக்கு வரலாம் என்று சொல்லி விட்டதால், மரத்துக்கு அப்பால் குழி எடுத்து அடுத்த நகரம் வரை சென்றனர்.
ஐந்து வாரங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த மரத்தினருகே வந்து, அக்குருவிக் கூட்டை சோதித்துப் பார்த்தபோது, முட்டைகள் பொரித்து, குஞ்சுகளும் வெளியே சென்று கூடு காலியாக இருந்தது.
அப்போது அந்த அதிகாரி, அக்கூட்டை அப்படியே கீழே எடுத்து வரச் சொன்னார். பணியாளர் அதை எடுத்து வர, மேலதிகாரி கூட்டை சோதித்துப் பார்த்தார்.
குருவி தன் கூட்டை அநேகப் பொருட்களை வைத்துக் கட்டியிருந்தது. ஒரு மூலையில் சுருட்டி வைக்கப்பட்ட ஒரு பேப்பரும் இருந்தது.
அதை விரித்துப் பார்த்த போது, அதில் ஒரு ஞாயிறு பள்ளி மாணவர் எழுதி வைத்திருந்த மனப்பாட வசனம் காணப்பட்டது.
இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கை யாயிருப்பேன்; கர்த்தராகிய யெகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர் (ஏசாயா 12:2) என்பது தான் அந்த வசனம்.
எங்கோ அந்த காகிதத்தைத் தூக்கி வந்து, அதையும் தன் கூட்டின் கட்டுமானப் பணியில் அந்தக் குருவி பயன்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த அந்த அதிகாரி, அக்குருவியின் கூட்டைக் கர்த்தரே பாதுகாத்தார் என்று விசுவாசித்து, கர்த்தரைத் துதித்தார்!
ஒரே ஒரு வசனத்தை வைத்திருந்த குருவியின் கூட்டையும், அதன் குஞ்சுகளையும் அழியாமல் கர்த்தர் காப்பாரென்றால், அந்த குருவிகளை விட விஷேசித்த நம்மையும், நம் வீட்டையும், நம் பிள்ளைகளையும் காப்பாற்ற அவர் எத்தனை வல்லவர்!
குருவிக்கு விசுவாசம் இருந்திருக்காது! ஆனாலும் கர்த்தர் அவைகளைப் பிழைப்பூட்டுகிறார்!
நமக்கோ இவ்வுலகிலும், கிறிஸ்து இயேசுவின் இரண்டாம் வருகையிலும் காப்பாற்றப்பட, மெய் விசுவாசமும், பரிசுத்த வாழ்வும் அவசியம் அல்லவா?