• Friday 20 June, 2025 09:42 AM
  • Advertize
  • Aarudhal FM

அங்கன்வாடியில் குழந்தைக்கு தாத்தா கொடுத்த பாலியல் தொல்லை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அங்கன்வாடி பள்ளியில் நான்கு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தை கண்டித்து பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.

பிள்ளையார் காட்டூர் குமரன் காலனி பகுதியை சேர்ந்த மூர்த்தி – வனிதா தம்பதியருக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை, ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தை என 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் நான்கு வயது பெண் குழந்தையை தார்காடு பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் சேர்த்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு அங்கன்வாடியில் இருந்து அழைத்துவரப்பட்ட குழந்தை அன்று இரவு திடீரென அழுதுள்ளது. பெற்றோர் விசாரித்ததில் அங்கன்வாடி பள்ளியில் இருந்த ஒரு தாத்தா தன்னை பல்வேறு பகுதியில் கடித்து வைத்ததாக குழந்தை கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று பெற்றோர் அங்கன்வாடி பள்ளிக்கு சென்று அங்குள்ள ஊழியர் மற்றும் ஆசிரியருடன் தனது குழந்தைக்கு நேர்ந்தது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனை தொடர்ந்து சம்பவத்தை கேள்விப்பட்டு பள்ளிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கன்வாடி குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் பற்றி விசாரித்தனர். நான்கு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட சம்பவம் மற்ற பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.