• Tuesday 22 October, 2024 07:52 AM
  • Advertize
  • Aarudhal FM

மோடி 3.0 அமைச்சரவையின் ‘கேரள சர்ப்ரைஸ்’ – பாஜகவின் கிறிஸ்தவ முகம் ஜார்ஜ் குரியனின் பின்புலம்

கோட்டயம்: மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் கேரள பாஜகவின் கிறிஸ்தவ முகமாக அறியப்படும் ஜார்ஜ் குரியனுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு நேற்று பதவியேற்றுக் கொண்டது. புதிய அமைச்சரவையில், பிரதமர் மோடி உட்பட 24 மாநிலங்களைச் சேர்ந்த 72 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 11 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் கேரளாவில் இருந்து 2 பேர் இணையமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அனைவரும் எதிர்பார்த்தது போல் நடிகர் சுரேஷ் கோபி அமைச்சராக இடம்பெற்ற நிலையில், சர்ப்ரைஸாக கேரள பாஜகவின் துணைத் தலைவர் ஜார்ஜ் குரியனுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது.

யார் இந்த ஜார்ஜ் குரியன்? – கேரளாவில் பாஜகவின் கிறிஸ்தவ முகமாக அறியப்படுபவர் இந்த ஜார்ஜ் குரியன். கோட்டயத்தை சேர்ந்த இவர், தற்போது கேரள பாஜகவின் துணைத் தலைவராக உள்ளார். வழக்கறிஞரான இவர், தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக சார்பில் பங்கேற்பதால் மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான நபரும் கூட.

மேலும், கேரளாவில் பிரதமர் மோடி, அமித் ஷா போன்ற தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் அவர்களின் பேச்சுக்களை மொழிபெயர்ப்பதும் இவரே. 1980-ல் இருந்தே பாஜகவில் இருக்கும் இவர், பாரதிய யுவ மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளர், பாஜக மாநிலச் செய்தி தொடர்பாளர், தேசிய செயற்குழு உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார்.

தேசிய சிறுபான்மை ஆணையத்தின் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். இந்த சமயத்தில் கேரளத்தில் கிறிஸ்தவ பெண்கள் காதல் திருமண விவகாரத்தில் லவ் ஜிஹாத் செய்யப்படுகிறது எனக் கூறி சர்ச்சைகளை ஏற்படுத்தினார். இவர், 2006-ல் புதுப்பள்ளி தொகுதியில் அப்போதைய கேரள முதல்வர் உம்மன் சாண்டியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும், தொடர்ந்து தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் குரியன் இடம் பெற்றிருப்பது, கிறிஸ்தவ சமூகத்துடன் பழகுவதற்கான பாஜகவின் மற்றொரு முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், குரியன் கேரளாவின் மிக முக்கியமான கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான சீரோ-மலபார் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்.

சமீப காலமாக கேரள கிறிஸ்தவ குழுக்களின் ஆதரவை பெற பாஜக தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. அதற்கு பலன்களும் கிடைத்து வருகின்றன. திருச்சூரில் சுரேஷ் கோபியின் வெற்றிக்கு ஓரளவு கிறிஸ்தவர்களின், குறிப்பாக கத்தோலிக்கர்களின் ஆதரவே காரணம் என பாஜக தரப்பு சொல்கிறது. இந்த பின்னணியில் தான் தற்போது ஜார்ஜ் குரியனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அண்ணாமலை தருமபுரி கிறிஸ்தவ தேவாலயத்தில் என்ன செய்தார்? எதிர்ப்பும், வழக்கும் ஏன்?

கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வந்த அண்ணாமலைக்கு எதிர்ப்பு, வழக்கு - என்ன நடந்தது?

11 ஜனவரி 2024

தருமபுரியில் கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதாகவும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்க முயன்றதாகவும் கூறி பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலை மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அங்கே என்ன நடந்தது?

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் யாத்திரை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த யாத்திரை கடந்த ஜனவரி 8ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய இரு இடங்களிலும் நடப்பதாக இருந்தது.

இதற்காக அண்ணாமலை சேலத்தில் இருந்து தருமபுரி மாவட்டத்தின் பொம்மிடி வழியாக வந்துகொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் உள்ள பி.பள்ளிப்பட்டியில் இருக்கும் புனித லூர்து அன்னையின் சிலைக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அண்ணாமலை அன்று மாலை 5.50 மணி அளவில் அவர் ஆலயத்திற்கு வந்து லூர்து அன்னையின் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள், குறுக்கிட்டு அவரைத் தடுத்து நிறுத்தினர்.

“எங்கள் மக்களைக் கொன்றார்கள், எங்கள் தேவாலயங்களை இடித்தார்கள்” என்று சில இளைஞர்கள் திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.

அவர்களிடம் சென்று பேசிய அண்ணாமலை, “அண்ணே, நான் சர்ச்சுக்கு வருவதில் என்ன பிரச்னை?” என்று கேட்டார். “அங்கு நடந்தது மத பிரச்னை அல்ல. இரு பழங்குடியினர் இடையிலான பிரச்னை. நீதிமன்ற உத்தரவின் பேரில் புதிதாக ஒரு சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து கொடுத்ததை மற்றொரு பிரிவினர் எதிர்த்தார்கள்.

இரு பிரிவுகளிலுமே இந்துக்களும் இருக்கிறார்கள், கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். இதில் மத அரசியல் செய்யக்கூடாது. இதில் மத அரசியல் செய்வது யார் எனப் புரிந்துகொள்ள வேண்டும். சண்டை நடந்தது அவர்களுக்குள். இதில் மாநில அரசுக்கு என்ன தொடர்பு?

உயர் நீதிமன்ற ஆணையின்படி இது அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகு முழு துணை ராணுவப் படையும் உள்ளே சென்றது. எல்லோரும் கலவரத்தைக் கட்டுப்படுத்தினார்கள். 2009இல் இலங்கையில் ராணுவத்திற்கும் தமிழர்களுக்கும் இடையில் பிரச்னை நடந்தது. 1,60,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இன்றைக்குப் பேசுபவர்கள் எங்கே போனார்கள்? ஆகவே மதத்தை கோவிலுக்குள்ளும் தேவாலயங்களுக்கு உள்ளும் கொண்டு வராதீர்கள்,” என்றார்.

அதற்குப் பதிலளித்த இளைஞர், “மதத்தை நாங்கள் கொண்டு வரவில்லை. யார், என்ன என்ற சுய அறிவோடு பேசிக்கொண்டிருக்கிறேன். உங்களுடைய பதில் நிறைய படிச்சிட்டேன். மத்திய அரசு அவர்களைத் தடுக்கவில்லை,” என்றார்.

கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வந்த அண்ணாமலைக்கு எதிர்ப்பு, வழக்கு - என்ன நடந்தது?

இதையடுத்து, “அரசியல் கட்சி ஆளும் தி.மு.க.காரன் பேசுற மாதிரி பேசக்கூடாது” என்றார் அண்ணாமலை. இதற்குப் பிறகு இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியது. ஒருகட்டத்தில், கோபமடைந்த அண்ணாமலை, “சர்ச் உங்க பேரில் இருக்கா? எல்லா மக்களுக்கும் உரிமை இருக்குல்ல. தடுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு. 10,000 பேரைக் கூட்டி வந்து தர்ணா பண்ணா என்ன பண்ணுவீங்க,” என்று கேள்வியெழுப்பினார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த இளைஞர்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதற்குப் பிறகு லூர்து அன்னையின் சிலைக்கு மாலை அணிவித்த அண்ணாமலை, தேவாலயத்திற்குள் சென்று வழிபாடு நடத்திவிட்டுப் புறப்பட்டுச் சென்றார். இந்தக் காட்சிகள் எல்லாம் வீடியோவாக பதிவு செய்யபட்டன, பின்னர் சமூக ஊடகங்களில் பரவின.

இதற்குப் பிறகு இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட ட்வீட்டில், “இன்றைய தினம், தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதி, பி.பள்ளிப்பட்டியில் அமைந்துள்ள, தூய லூர்து அன்னை திருத்தலத்தில் இறை வழிபாடு செய்ய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தமிழக மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும் அமைதியுடனும், நலமுடன் வாழ அன்னையைப் பிரார்த்தித்துக் கொண்டோம்,” என்று கூறி, புகைப்படங்களையும் பகிர்ந்தார்.

இதற்குப் பிறகு பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பொம்மிடி காவல்துறையில், புகார் அளித்தார். அந்தப் புகாரில், 10,000 பேருடன் வந்து தர்ணா செய்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டு அண்ணாமலை மிரட்டியதாக புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடு பேசுவது, பொது அமைதியைக் குலைக்கத் தூண்டும் வகையில் பேசுவது, வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகைமை மற்றும் வெறுப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் பேசுவது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் எல்லோரும் வரலாம் என்ற நிலையில், பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை வருவதற்கு மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள காவல்துறையில் புகார் தெரிவித்திருக்கும் இளைஞர் கார்த்திக்கிடம் பேசினோம்.

அவர், “கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் எல்லோரும் வரலாம் என்பது உண்மைதான். தேவாலயத்தில் இருந்து யாரும் அவரை அழைக்கவில்லை. உடன் இருக்கும் சிலர் ஏற்பாடு செய்துதான் அவர் வந்தார்.

ஆனால், பிற மாநிலங்களில், குறிப்பாக மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடக்கும்போது பா.ஜ.க. எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்பதால் அதைப் பற்றிக் கேட்டோம். அதனால்தான் அவர் வரக்கூடாது என்று சொன்னோம். இதை அரசியல் ரீதியாகச் செய்யவில்லை. இப்போது அவர் பேசிய வார்த்தைகளை வைத்து அவர் மீது புகார் கொடுத்திருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

ஆனால், கடவுளை வழிபடச் சென்றவரைத் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வழிபடச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது அராஜகம் என்கிறார் பா.ஜ.கவின் மாநிலப் பொதுச் செயலாளர் நாராயணன் திருப்பதி.

“எல்லோருக்கும் சென்று வழிபடக் கூடிய பொதுவான ஒரு வழிபாட்டுத் தலத்திற்குள் யாரையும் வரக்கூடாது எனத் தடுப்பது அராஜகம். அப்படித் தடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல், வழிபடச் சென்றவர் மீது நடவடிக்கை எடுப்பது என்ன நியாயம்?

அண்ணாமலை கிறிஸ்தவ மதத்தைப் போற்றத்தானே அங்கே சென்றார்! ஆனால், அவர் மீது எதற்காக வழக்குப் பதிந்திருக்கிறார்கள்? உதயநிதி ஸ்டாலின் இந்து மதத்தை அழிப்பேன் என்கிறார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?” எனக் கேள்வி எழுப்புகிறார் நாராயணன் திருப்பதி.

ஈஸ்டர் சன்டே கிறிஸ்துவர்களை சந்தித்த கேரள பாஜக : சி.பி.எம், காங்கிரஸ் எச்சரிக்கை

பாஜகவின் இந்த முயற்சி முக்கிய கத்தோலிக்கர்களுக்கு மட்டுமே என்று கூறியுள்ள எதிர்கட்சிகள், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மீதான தாக்குதல்களை பற்றி கேள்வி எழுப்பியுள்ளன.

Kerala BJp
கேரளா பா.ஜ.க தலைவர்கள் கிறிஸ்துவர்களுடன் சந்திப்பு

ஈஸ்டர் சன்டே நாளை முன்னிட்டு கிறிஸ்துவ மக்களிடடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்குள் ஒரு இடத்தை பெறும் முயற்சியின் ஒரு பகுதியாக கேரளா பாஜகவின் முக்கிய தலைவர்கள், கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்புகளையும், மாநிலத்தின் பல பகுதிகளிலும் கிறிஸ்துவ மக்கனை சந்திக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கியது.

பிஷப் இல்லங்களுக்கு உள்ளேயும் வெளியேயும், பிரதமர் நரேந்திர மோடியின் ஈஸ்டர் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட பாஜகவினர், சமூக வலைதளங்களில், பாஜகவின் பல்வேறு அதிகாரப்பூர்வ பக்கங்களில், உயிர்த்தெழுந்த இயேசுவின் படங்கள் மற்றும் ஈஸ்டர் முட்டைகளால் தொடர்பான பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இதில் கேரளா மாநில பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்திரன் தனது சொந்த மாவட்டமான கோழிக்கோடு பகுதியில் இரண்டு பிஷப்களை சந்தித்தார், மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான வி.முரளீதரன் திருவனந்தபுரம் பேராயத் தலைவர் தாமஸ் ஜே நெட்டோவுக்கு ஈஸ்டர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். கண்ணூரில் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஏ.பி.அப்துல்லாகுட்டி, மூத்த தலைவர் பி.கே.கிருஷ்ணதாஸ் உடன் தலச்சேரி பேராயர் ஜோசப் பாம்ப்ளனியை சந்தித்தார்.

பாஜகவின் இந்த முயற்சிக்கு கிறிஸ்தவர்களிடம் இருந்து அமோக ஆதரவு கிடைத்து வருவதாகவும், மோடி தலைமையிலான அரசின் மீது அவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் சிறுபான்மை மதக் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையில் வலுவாக உள்ள வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கோவாவில் நல்லாட்சியின் பலன்களை கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்கள் பார்த்து வருவதாக, கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்களும் இதேபோன்ற மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளனர், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஈஸ்டர் நாளில், கேரளாவில் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் எண்ணிக்கையில் பலம் வாய்ந்த கிறிஸ்தவக் குழுவான கத்தோலிக்கர்கள் மட்டுமே பாஜகவின் முக்கிய இலக்காக உள்ளனர். கத்தோலிக்க திருச்சபையானது “லவ் ஜிஹாத்” க்கு எதிரான பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்தது, இது கத்தோலிக்க திருச்சபையையும் சங்க பரிவாரத்தையும் சமீபத்திய வெளிப்பாட்டிற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நெருக்கமாக கொண்டு வந்தது.

இருப்பினும், ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவர் பாசெலியோஸ் மார்தோமா மேத்யூஸ், பாஜகவின் கிறிஸ்தவப் பணியை மறுத்துள்ளார். “ஈஸ்டர் தின வருகையால் பாஜக மீதான கிறிஸ்தவர்களின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் ஏற்படாது. நாட்டில் தேவாலயங்கள் தாக்கப்பட்டபோது, பாஜக அதைக் கண்டுகொள்ளவில்லை. இது அந்தத் தாக்குதல்களை கட்சி அமைதியாக ஆதரித்ததா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார்.

அடுத்த லோக்சபா தேர்தலைக் கருத்தில் கொண்டு சங்பரிவாரின் பரப்புரைத் திட்டம், வடக்கில் உள்ள தேவாலயங்கள் மீதான இந்து வலதுசாரிகளின் தாக்குதல் சம்பவங்களைத் தூண்டிய ஆளும் சிபிஐ (எம்) (CPI(M) மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடமிருந்தும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரையும், கம்யூனிஸ்ட் கட்சியினரையும் இந்தியாவிற்கு உள் நாட்டு அச்சுறுத்தல்களாக ஆர்எஸ்எஸ் அறிவித்துள்ளது. தற்போது சிறுபான்மையினரையும் தன்னுடன் சேர்த்துக்கொள்ளும் ஆர்எஸ்எஸ் முயற்சி சிரிப்பை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் “கடந்த கிறிஸ்துமஸின் போது, நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் பரவலான தாக்குதல்களை எதிர்கொண்டனர். வட இந்தியாவில் தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் முழுமையாக முடிவடையாத நேரத்தில் கேரளாவில் உள்ள பாஜக தலைவர்கள் கிறிஸ்தவ மதகுருமார்கள் மற்றும் நிறுவனங்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளனர். அறிவொளி பெற்ற கேரள மக்கள் பாஜகவின் அணுகுமுறையை உணர்ந்து கொள்வார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சங்பரிவாரின் அரசியலின் ஆபத்துக்களை உணர்ந்து பிற இடங்களில் உள்ள கிறிஸ்தவ குழுக்கள் கிளர்ச்சியில் ஈடுபடத் தொடங்கியதாக சிபிஐ(எம்) கூறியது. “பல எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக சங்பரிவார் பயன்படுத்திய மிரட்டல் மற்றும் தூண்டுதல், இப்போது கிறிஸ்தவப் பிரிவினரை அதன் மடியில் கொண்டு வர பயன்படுத்தப்படுகிறது. பாஜக தலைவர்களின் பிஷப்புகளுடனான சந்திப்பு அதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று அக்கட்சி கூறியது.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன், பிஜேபி கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதனால் சிறுபான்மை சமூகத்தின் மீதான அதன் “புதிய காதல்” அதன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். “நூற்றுக்கணக்கான தேவாலயங்களில் வழிபாட்டை பாஜக சீர்குலைத்துள்ளது. சமீப ஆண்டுகளில் சங்க பரிவார் அமைப்புகள் ஏராளமான தேவாலயங்களை சேதப்படுத்தியுள்ளன.

சங்பரிவார் தாக்குதலில் இருந்து பாதுகாப்புக் கோரி, பல கிறிஸ்தவ அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், பாஜக தலைவர்கள் கேரளாவில் கிறிஸ்தவ இல்லங்களுக்குச் செல்கின்றனர். கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த வலையில் சிக்க மாட்டார்கள். கேரளாவில் பாஜக மிகப்பெரிய இந்துத்துவா பிரச்சாரத்தை நடத்தியது, ஆனால் மாநிலத்தில் 90% இந்துக்கள் அதற்கு எதிராக உள்ளனர், ”என்று அவர் கூறினார்.