• Saturday 14 March, 2026 03:13 PM
  • Advertize
  • Aarudhal FM

கல்வி அலுவலகத்தில் தீ விபத்து ஆவணங்கள் எரிந்ததால் பரபரப்பு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டையில் வட்டார கல்வி அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இயங்கி வருகிறது. இங்கு தா.பேட்டை ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதிவேடுகள், பள்ளி மாணவ, மாணவிகள் குறித்தான அனைத்து பதிவேடுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த வட்டார கல்வி அலுவலகத்தின் அருகே காலியாக இருந்த இடத்தில் சருகுகள், காய்ந்த கட்டைகள் கிடந்துள்ளது. இதில் எதிர்பாராத விதமாக பற்றிய நெருப்பு வட்டார கல்வி அலுவலகத்தின் உள்ளே தீப்பொறி பரவி உள்ளது. இதில் வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து புகை வருவதை அப்பகுதியினர் பார்த்து முசிறி தீயணைப்பு நிலையத்திற்கும், ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து முசிறி தீத்தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் கர்ணன் தலைமையில் மீட்பு படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து பீரோ கணினிகள் உள்ளிட்டவைகளை உடனடியாக வெளியே கொண்டு வந்தனர். இதில் பழைய பதிவேடுகள் அனைத்தும் தீயில் எரிந்து போனது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.