• Sunday 14 September, 2025 06:23 PM
  • Advertize
  • Aarudhal FM

அகமதாபாத் விமான விபத்து… டாடா நிறுவனத்திற்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு

ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து, குறிப்பிட்ட ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த டாடா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787- 8 டிரீம்லைனர்’ விமானம் விபத்திற்குள்ளானதில், அதில் இருந்த 242 பேரில் 241 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகலை ஏற்படுத்தியுள்ள சூழலில், இது ”டாடா குழும வரலாற்றின் இருண்ட நாள்…” எனக் குறிப்பிட்டுள்ளார் அக்குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன்.

இந்த நிலையில், ’ஏர் இந்தியா’ நிறுவனம் இயக்கும் ‘போயிங் 787- 8’, ‘போயிங் 787- 9’ ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, எரிபொருள் சோதனை, கேபினின் காற்றழுத்தம், எலக்ட்ரானிக் என்ஜின் கட்டுப்பாடு சார்ந்த அமைப்புகள், Take off தொடர்பான சோதனை, ஹைட்ராலிக் சோதனை உள்ளிட்ட 6 வகையான சோதனைகளை விமானம் புறப்படும் முன்பு மேற்கொள்ள வேண்டும் எனவும், விமான கட்டுப்பாட்டு ஆய்வுகளை மறு உத்தரவு வரும் வரை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மின்னணு கட்டுப்பாடு சார்ந்த அமைப்புகளை 15 நாட்களுக்கு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான அறிக்கையை விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே, அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை ஏர் இந்தியா தலைமைச் செயல் அதிகாரி காம்பெல் வில்சன் சந்தித்துப் பேசினார்.  சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, விமான விபத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் காம்பெல் வில்சன் விவரித்ததாகக் கூறப்படுகிறது