• Wednesday 10 September, 2025 02:59 PM
  • Advertize
  • Aarudhal FM

இயேசு கேட்ட கேள்விகள்

நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?

( யோவான் 18 : 34 )

இயேசுவைப் படுகொலை செய்ய வேண்டுமென யூத மதத் தலைவர்கள் அவரை பிலாத்துவின் முன்னால் நிறுத்துகிறார்கள். பிலாத்து அவர்களிடம், ‘நீங்களே கொண்டு போய் உங்கள் சட்டப்படி இவனுக்கு தண்டனை வழங்குங்கள்’ என்கிறான். அதாவது யூத சட்டப்படி தண்டனை வழங்கச் சொல்கிறார். அப்போது யூதர்கள் “சட்டப்படி நாங்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது” என்கின்றனர்.

யூதர்களுடைய மரண தண்டனை என்பது கல்லால் எறிந்து கொல்வது. ஆனால் இயேசு சிலுவையில் அறையுண்டு மரிக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தம். எனவே ரோம முறைப்படி தான் தண்டனை நிறைவேற்றியாக வேண்டும். யூதர்கள் தங்களை அறியாமலேயே இறைவார்த்தைகளை அங்கே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பிலாத்து இயேசுவைப் பார்த்துக் கேட்டான், ‘நீ யூதர்களின் அரசனா ?’

அந்தக் கேள்வியை பிலாத்து அலட்சியமாய்க் கேட்டிருக்கலாம். அல்லது ஏளனமாய்க் கேட்டிருக்கலாம். காரணம் மரண தண்டனைக்காக அவனிடம் கொண்டு வரப்படுபவர்கள் பெரும்பாலும் கலகக் காரர்கள். அல்லது அதிகாரத்துக்கு எதிராய் கடுமையாய்ப் போராடுபவர்கள். அவர்கள் யாருமே இயேசுவைப் போல அமைதியாய் நிற்பதும் இல்லை. தெளிவாய்ப் பேசுவதும் இல்லை.

தன்னை ஒருவன் அரசனாக்கிக் கொள்ள வேண்டுமெனில், அவருக்கு ஆதரவாளர்கள் இருக்க வேண்டும். அவருடைய ஆடைகள் கண்டிப்பாக பகட்டின் ஆடையாய் இருக்க வேண்டும். ஆனால் இயேசுவிடம் எதுவும் இல்லை. தனியாய் நிற்கிறார். மிகவும் எளிமையாய் நிற்கிறார். அமைதியாய் நிற்கிறார். இப்போது பிலாத்துவிடம் வியப்பும் ஏளனமும் சரி விகிதத்தில் கலந்திருக்கலாம். எனவே தான் அந்தக் கேள்வியைக் கேட்கிறார்.

இயேசு அதற்கு ஒரு கேள்வியையே பதிலாய்த் தருகிறார். அந்தக் கேள்வி தான் மிகப்பெரிய ஆன்மிக சிந்தனைகளை உள்ளடக்கிய ஒரு கேள்வி. “நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?” என்கிறார் இயேசு ! அதாவது நான் யார் என்பதை அறியும் ஆவல் உமக்கு இருக்கிறதா ? அல்லது அடுத்தவர்கள் என்னை அரசன் என்கிறார்கள் அது உண்மையா என அறியும் ஆவல் இருக்கிறதா ? இதுவே இந்தக் கேள்வியின் பொருள்.

நீராகக் கேட்கிறீர் என்றால், இயேசு உண்மையில் யார் என்பதை அறியும் முயற்சி.

பிறர் சொல்வதை வைத்துக் கேட்பதெனில், இயேசுவைச் சிலுவையில் அறையும் முயற்சி !

பிலாத்து,

இயேசுவை அறிய விரும்புகிறானா ? அறைய விரும்புகிறானா ?

இயேசுவின் கேள்வியில் பிலாத்து தடுமாறியிருக்க வேண்டும். உண்மையிலேயே இயேசுவை பிலாத்து அறிய விரும்பினானா ? இயேசு நோய்களை நீக்கினாரே, பேய்களை விரட்டினாரே, நீர் மீது நடந்தாரே, அதிசய அப்பங்களைத் தந்தாரே, அற்புதமான போதனைகள் தந்தாரே, விண்ணக வாழ்வின் வழியைக் காட்டினாரே.. இவற்றையெல்லாம் அறிய விரும்பினானா பிலாத்து ?

இல்லை, கூட்டத்தினர் இவரைக் கொலை செய்ய வேண்டுமெனும் வெறியில் கொண்டு வந்திருக்கிறார்களே. அந்த குற்றச் சாட்டை நிரூபிக்க நினைத்தானா ? குற்றம் நிரூபிக்கப்பட்டால் கொலை செய்வது எளிதாகிவிடும் என நினைத்தானா ?

நம்மை நோக்கி இயேசு இந்தக் கேள்வியைக் கேட்டால் என்ன சொல்வோம் ?

நாம்

இயேசுவை அறிய நினைக்கிறோமா ?

இயேசுவைப் பற்றி அறிய நினைக்கிறோமா ?

இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. ஒன்று அன்பினால் இணைவது. இன்னொன்று தகவல்களினால் கட்டமைக்கப்படுவது. ஒன்று சித்தாந்தங்களோடு ஒன்றிப்பது, இன்னொன்று மேம்போக்காக தெரிந்து கொள்வது. ஒன்று அவரை நம் வாழ்வின் பாகமாய் மாற்றுவது, இன்னொன்று அவரை தூரத்தில் வைத்து எட்டிப் பார்ப்பது !

நாம் இயேசுவை எப்படி அறிய விரும்புகிறோம் ?

பிலாத்து இயேசுவை அறிய விரும்பவில்லை. இயேசு அவனிடம் சொன்னார், ‘அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்” என்று. பிலாத்து இயேசுவைப் பார்த்து, ‘உண்மையா அது என்ன?’ என்று கேட்டான்.

பிலாத்து

உண்மையா அது என்ன ? என கேட்காமல்

உண்மையா அது யார் ? என கேட்டிருக்கலாம். ஏனெனில் நானே உண்மை என்றவரிடம், எது உண்மை என்று கேட்கிறான் பிலாத்து. யார் உண்மை என கேட்டிருந்தால், விடை கிடைத்திருக்கும். களம் மாறியிருக்கும்.

பிலாத்து உண்மையின் முன்னால் நின்ற பொய் ! அவனுக்கு உண்மை என்ன என்பது தெரிந்திருந்தது. இயேசுவைப் பொறாமையால் தான் கையளித்தார்கள் எனும் உண்மை ! இயேசு குற்றம் செய்யவில்லை எனும் உண்மை ! இயேசு சாவுக்குரியவர் அல்ல எனும் உண்மை ! தான் நினைத்தால் இயேசுவை விடுதலை செய்ய முடியும் எனும் உண்மை. எல்லா உண்மையும் தெரிந்த அவனுக்கு, ‘உண்மை’ என்பதே இயேசு தான் என்பது தெரியவில்லை. அவன் உண்மையைக் கொன்ற பொய்யாய் மாறிப் போனான்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டபின் அவன் சிலுவையில் வைக்க ஒரு பலகை தயாராக்குகிறான். அதில் எழுதுகிறான் “யூதர்களின் அரசன்”. சீனாய் மலை கட்டளைகளை எழுதியது, கல்வாரி மலை அதில் கையொப்பமிட்டது ! ‘நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசன்” என !

நீ யூதனின் அரசனா ? என மரணத்துக்கு முன் கேள்வி எழுப்பியவன். ‘நீர் யூதரின் அரசன் தான்” என மரணத்திற்குப் பின் விடை எழுதுகிறான். விடையைத் திருத்தச் சொன்னவர்களை கோபத்துடன் திருப்பி அனுப்புகிறான் !

நான் விண்ணில் உயர்த்தப்படும் போது எல்லோரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன் என்றார் இயேசு ! அதில் பிலாத்துவும் ஒருவனா ?

இன்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோம் !

நான் இயேசுவை அறிய விரும்புகிறேனா

அறைய விரும்புகிறேனா ?

Thanks to Bro. சேவியர்

சிங்கள் டீ

ஒருகுவளைதேநீர்

தெருவில் ஒருவர் இருக்கிறார்.

இளைஞன் ஒருவர் அவருக்கு தேனீர் கொண்டு கொடுக்கிறான்.

நபர் : என்னப்பா விசேஷம்

இளை : விசேஷம் ஒண்ணும் இல்லை.. எங்க வீடு அது தான். வீட்ல டீ குடிச்சிட்டு இருந்தேன். நீங்க இங்க நிக்கறதை பாத்தேன். அதான் ஒரு டீ குடுக்கலாமேன்னு நினைச்சேன்

நபர் : ஏன்பா.. யாருக்குமே தோணாதது உனக்கெப்படி தோணிச்சு ?

இளை : எங்கப்பாவும் இப்படி ஒரு வேலை பாத்தவரு தான்… இந்த கஷ்டம் என்னன்னு எனக்கு தெரியும்..

நபர் : அப்படியா… ஆனா….பெரிய வீட்ல இருக்கீங்க ?

இளை : அப்பா என்னை நல்லா படிக்க வெச்சாரு… . பை காட்ஸ் கிரேஸ்…நான் நல்லா இருக்கேன்…

நபர் : உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லா அமையும்பா.. பெரிய இடத்துல இருந்தாலும், உன் கண்ணுக்கு சிறியவங்க தெரியறாங்க….

இளை : எங்க அப்பா சொல்லுவாரு… குப்பை பொறுக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கும்பா.. அந்த டைம்ல…. யாராச்சும் ஒரு வாய் டீ தந்தா நல்லா இருக்கும்ன்னு .. ஆனா யாரும் நெருங்கினது கூட இல்லை.. மூக்கை பொத்திட்டு போயிடுவாங்க…

நபர் : உண்மை தான்பா..

இளை : ஒரு தடவையாச்சும் அடுத்தவங்க பக்கத்துல நின்னு பாத்தா தான்.. இந்த கஷ்டம் புரியும். அதான் நான் இப்படி யாரையாச்சும் பாத்தா.. ஓடிப் போய் ஒரு டீயோ, தண்ணியோ ஏதாச்சும் குடுப்பேன்.

நபர் : ரொம்ப சந்தோசப்பா.. யாருன்னே தெரியாத எனக்கு நீ டீ குடுத்தது ரொம்ப சந்தோசம்பா…

இளை : இப்போ தான் தெரிஞ்சிடுச்சே.. இனிமே நாம தெரியாதவங்க இல்லை.. தெரிஞ்சவங்க.

நபர் : ம்ம்.. அப்பா பிள்ளையை ரொம்ப நல்லா வளர்த்திருக்காரு

இளை : பரம பிதா, அவரோட பிள்ளையை நமக்காக சாவடிச்சாரு.. அதோட ஒப்பிடும்போ நாம பண்றதெல்லாம் ஒண்ணூமே இல்லையே சார்

நபர் : அதென்னப்பா கதை

இளை : உக்காருங்க சார்.. நான் சொல்றேன். ஸ்டோரி ஆஃப் கிறிஸ்மஸ்.. அது ஒரு பெரிய பெயின்ஃபுல் ஸ்டோரி…

நான் அழகா இல்லை

ந1 : என்னடா டல்லா இருக்கே

ந 2 : இல்ல .. என் கிளாஸ்ல எல்லாருமே என்னை விட ஹைட்டா இருக்காங்க.. நான் மட்டும் தான் இப்படி குள்ளமா இருக்கேன் அதான்.

ந 1 : ஹைட்ல என்னடா இருக்கு.. எத்தனையோ பெரிய பெரிய வரலாற்று மனிதர்கள் குள்ளமா தான் இருக்காங்க‌

ந 2 : எனக்கு ஹிஸ்டாரிக்கல் பீப்பிள் ஆக ஆசையில்லை, நார்மலா இருந்தா போதும்.. அதுக்கு ஐ நீட் ஹைட்

ந 1 : ம்ம்… ஹைட் வரும் கவலைப்படாதே

காட்சி 2

ந 1 : மறுபடியும் என்னடா டல் ?

ந 2 : என் கலர் ரொம்ப டல்லா இருக்கு.. நேற்று குரூப் போட்டோ ஒண்ணூ எடுத்தோம்.. நான் மட்டும் கருப்பா…. இருக்கேன்

ந 1 : டேய்.. நீ நல்ல அழகா தாண்டா இருக்கே

ந 2 : நீயும் கலாய்க்காதே.. கறுத்துப் போன‌ கருப்பட்டி மாதிரி இருக்கேன்…

ந 1 : டேய்.. உலகத்துல..

ந 2 : போதும் போதும்.. வரலாற்றுல மண்டேலா எல்லாம் கருப்பு ந்னு சொல்ல வரே.. அப்படி தானே… போதும்.

காட்சி 3

ந 1 : டேய்.. இப்ப என்னடா டல் ?

ந 2 : என் வாய்ஸ் இருக்கே…நல்லாவே இல்லடா..

ந 1 : டேய்.. உன்னை திருத்தவே முடியாது.. எதையாவது ஒண்ணை கண்டு பிடிச்சு ஃபீல் பண்றே.. உன்னை இன்ஃபீரியரா நினைச்சுக்கறே.

ந 2 : நான் அப்படி தானே இருக்கேன். தட்ஸ் த ஃபேக்ட்…

ந 1 : நீ அமெரிக்க ஜனாதிபதியோட பிள்ளையா இருந்தா இப்படி எல்லாம் யோசிப்பியா ?

ந 2 : அப்படின்னா நான் எதுக்கு இதெல்லாம் யோசிக்கணும்.. எப்படி இருந்தாலும் கெத்துன்னு நினைப்பேன்.

ந 1 : அதை விட ஆயிரம் ஆயிரம் மடங்கு பெரிய ராஜாதி ராஜா இயேசுவோட பிள்ளைடா நீ.. அப்படின்னா நீ இளவரசன்…

ந 2 : ஓ.. அப்படி சொல்றே

ந 1 : யா… அப்படிப்பட்ட நீ இப்படி சப்ப மேட்டருக்கு ஃபீல் பண்ணலாமா ? இயேசு மனுஷனா வந்தப்போ உயரம், நிறம், பேச்சு, ஒல்லி குண்டு பத்தியெல்லாம் பேசினாரா என்ன ?

ந 2 : ம்ம்ம்நோ.. பேசவே இல்லை

ந 1 : அதெல்லாம் முக்கியமே இல்லை… இனிமே நீ இப்படிப்பட்ட குறைகளைப் பற்றி பாக்காம, நீ யாரோட பிள்ளைன்னு பாரு .. அப்போ உனக்கு தன்னம்பிக்கை தானா வரும்.

ந 2 : யா.. உண்மை தான்…

ந 1 : தட்ஸ் த மெசேஜ் ஆஃப் கிறிஸ்மஸ் டா… எல்லாரும் இறைவனின் பிள்ளைகள். அவர் நம்மோட மூத்த அண்ணன்.

ந 2 : இனிமே இந்த தேவையற்ற மேட்டர் பேசமாட்டேன்டா… கருப்போ சிவப்போ, நான் கடவுளோட மகன். ! ஹிஸ் பிரின்சஸ் ! இளவரசன்… தட்ஸ் இட்

ந1 : ஹேப்பி கிறிஸ்மஸ் டா

ந 2 : ஹேப்பி கிறிஸ்மஸ்

Thanks to Bro. Xavior

அது ரொம்ப ஈசி

இறைவனுடைய கருணைக்கண் பார்வைக்காகவே மானிடர் ஏங்கித் தவிக்கின்றனர். எப்படியாவது கடவுளுடைய கவனத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவே அவர்கள் பிரம்ம பிரயர்த்தனம் செய்கின்றனர்.

சிலர் ஒறுத்தல் முயற்சிகளைச் செய்து இறைவனின் கவனத்தைப் பெற முயல்கின்றனர். சாப்பாட்டை தவிர்க்கின்றனர், நடை பயணங்கள் மேற்கொள்கின்றனர், பல மணிநேரம் இறைவனை நோக்கி வேண்டுகின்றனர், உடலைக் காயப்படுத்திக் கொள்கின்றனர் இப்படி ஏதேதோ செய்கின்றனர்.

சிலர், “ஆண்டவரே உம்மை விசுவசிக்கிறேன், நீரே கடவுள்” என தொடர்ந்து சொல்லி அவருடைய கவனத்துக்குள் வர முயல்கின்றனர். இன்னும் சிலர், “போதனைகள் செய்து இறைவனின் வளையத்துக்குள் நுழைய முயல்கின்றனர்”

கடவுள் மேல் அன்பு கூர்வது எப்படி என்பதைப் புரிந்துகொள்வதில் இருக்கிறது ஆன்மீகத்தின் தெளிவு.

இயேசு மிகத் தெளிவாகச் சொல்கிறார், “கண்ணில் காணும் சகோதரனை அன்பு செய்யாமல், கண்ணில் காணாத கடவுளை அன்பு செய்ய முடியாது”. சக மனித கரிசனை இல்லாமல் நாள் முழுவதும் பைபிளை எடுத்துக்கொண்டு, விசுவாசம், அன்பு, கிருபை, இரட்சிப்பு என பேசிக்கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை என்பதே இயேசு சொல்கின்ற எளிமையான சிந்தனையாகும்.

இதை உறுதிப்படுத்தும் விதமாகத் தான், இறுதித் தீர்வை நாளில் வலப்புறமும் இடப்புறமும் நிற்கும் மக்களிடம் இயேசு கேள்விகளைக் கேட்கிறார். அவருடைய கேள்விகளில் உன் விசுவாசத்தின் ஆழம் என்ன ? உனது பிரார்த்தனைகளின் நீளம் என்ன ? என்பது இடம்பெறவில்லை. உனது செயல்களில் தெரிந்த நேசம் என்ன என்பது மட்டுமே இடம்பெறுகின்றது.

இயேசுவின் மீது கொள்ளும் விசுவாசமும், நம்பிக்கையும், தேர்வுக்குள் நுழைவதற்காய் தரப்படும் “ஹால்டிக்கட்” போன்றது. மனிதர்கள் மீது பொழிகின்ற அன்பும், கரிசனையும் நாம் எழுதும் தேர்வைப் போன்றது.

வெறும் ஹால்டிக்கெட்டை மட்டுமே வாங்கி விட்டு தேர்வில் முதல் மதிப்பெண்ணைப் பெறலாம் எனக் காண்பது பகல்க்கனவு. அதே போலத் தான் வெறும் விசுவாசத்தை மட்டும் முழங்கிவிட்டு சகமனித கரிசனை இல்லாமல் விண்ணகம் நுழையலாம் எனக் கனவு காண்பதும்.

விவிலியம் சொல்கிறது, “செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம்” ! ஆண்டவர் மேல் அன்பு கூர்வது எப்படி என்பதைப் புரிந்து கொள்வோம், செயல்படுவோம்*

சேவியர்

யார் உயர்ந்தவன் ?

கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வினால்
ஞானம் தன் உயர்குடிப்பிறப்பில்
மேன்மை பாராட்டுகிறது
( சாலமோனின் ஞானம் : 8:3 , இணை திருமறை )

எத்தனை முறை அழித்தாலும் மறையாத ஏற்றத்தாழ்வு மனநிலை சமூகத்தில் மனிதரிடையே புரையோடிக் கிடக்கிறது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், உயர் குடிப் பிறப்பு, கீழ் குடிப் பிறப்பு எனும் மறைமுக யுத்தம் திருச்சபைகளிலும் நிலவி வருகிறது. சில இடங்களில் வெளிப்படையாய் நடக்கிறது, பல இடங்களில் மறை முகமாய் நடக்கிறது. அது ஒன்று மட்டுமே வித்தியாசம்.

இந்த சமத்துவமற்ற சூழலில் யார் உயர்குடிப் பிறப்பு என்பதை விவிலியம் நமக்குக் கற்றுத் தருகிறது. “கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வு வாழ்வது உயர்குடிப் பிறப்பு” என்கிறது சாலமோனின் ஞானம் நூல். இறைவனோடு ஒன்றுபட்டு வாழாத வாழ்வு கீழ்குடிப் பிறப்பு எனப் புரிந்து கொள்ளலாம்.

உயர்குடியும், தாழ் குடியும் பிறப்பினால் வரவில்லை, வாழ்வினால் வருகிறது எனும் புதிய சிந்தனையை விவிலியம் தருகிறது. யார் வேண்டுமானாலும் உயர்குடியாய் மாறலாம், யார் வேண்டுமானாலும் கீழ் குடியைத் தேர்வு செய்து அழியலாம். இதையே விவிலியம் நமக்கு விளக்குகிறது.

கடவுளோடு ஒன்று பட்ட வாழ்வை வாழ்வதே மேன்மையானது. அத்தகைய வாழ்வு வாழ்பவர்கள் மட்டுமே மேன்மையை அடைவார்கள். கடவுளை விட்டு விலகி வாழும் போது நமது வாழ்க்கை மேன்மையிழக்கிறது.

பிறப்பின் போது நாம் எந்த பெற்றோருக்குப் பிறந்தோம் என்பதை வைத்து நாம் அளவிடப்படுவதில்லை. எந்த தொழிலைச் செய்து வாழ்கிறோம் என்பதைப் பார்த்து நாம் அளவிடப்படுவதில்லை. எந்த பொருளாதார வசதியில் இருக்கிறோம், என்னென்ன திறமைகளைக் கொண்டிருக்கிறோம் என்பதை வைத்தும் நாம் மதிப்பிடப்படுவதில்லை. இறைவனோடு ஒன்றுபட்ட வாழ்வு வாழ்கிறோமா என்பதே முக்கியம்.

ஒன்றுபட்ட வாழ்வு என்பது ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத வாழ்வு. இதைத்தான் இயேசு “செடி நிலைத்திருக்கும் கிளைகள்” என குறிப்பிடுகிறார். செடியோடு இணைந்தாலன்றி, கிளையானது கனிகொடுப்பதில்லை. ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துவிட்டால் கிளையானது விறகாகும். தனது கனி கொடுக்கும் தன்மையை இழந்து விடும். தனது வாழ்வை இழந்து விடும். நெருப்புக்கு தன்னை அர்ப்பணித்து விடும்.

நாம் உயர்குடிகளாக வாழ இறைமகன் இயேசு அழைப்பு விடுக்கிறார். அதை நமது முதல் பிறப்பு முடிவு செய்வதில்லை, இரண்டாம் பிறப்பு முடிவு செய்கிறது. இறைவனோடு வாழப் போகிறேன் எனும் தீர்மானம் முடிவு செய்கிறது. இறைவனோடு ஒன்றுபட்ட வாழ்க்கை வாழ்வதில் அது முழுமையடைகிறது.

அத்தகைய வாழ்க்கை வாழ, இறைவனின் ஞானத்தை நாம் வேண்டுவோம்.*

Thanks to Bro. சேவியர்

உங்கள் ஆன்மீகத்தை செயலில் காட்டுங்கள்.

நண்பர் ஒருவருடன் பேசியபடி சாலையில் நடந்து கொண்டிருந்தேன். திடீரென எங்களை உரசியபடி பறந்தது ஒரு கார். அதிர்ச்சியுடன் பார்த்தேன். காரின் பின் கண்ணாடியில், “என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்” என எழுதப்பட்டிருந்தது. கூடவே ஒரு சிலுவையின் படமும்.

“சிலுவை படம் போட்டு, வசனமும் ஒட்டிகிட்டு எப்படி ஓட்றான் பாத்தீங்களா ?” என்றார் அருகில் நின்றிருந்த நண்பர். வசனங்களை காரில் ஒட்டியதால் ஒருவன் நல்லவனாய் மாறிவிட முடியாது என்றேன் சிரித்துக் கொண்டே.

உண்மை தான். ஏதேதோ மத வாசகங்களுடன் வருகின்ற கார்களில் முக்கால்வாசி அச்சுறுத்தியபடி தான் பறக்கின்றன. இத்தகைய சந்தர்ப்பங்களில் அந்த மதங்களின் மீது மக்களுக்கு மரியாதை வருவதற்குப் பதில் அருவருப்பே எழும் என்பதிலும் சந்தேகமில்லை.

உங்கள் ஆன்மீகத்தை செயலில் காட்டுங்கள்.

நிதானமாய் வண்டி ஓட்டலாம். சாலை கடக்க நினைப்பவர்களுக்காய் காத்திருக்கலாம். அவசர வாகனங்களுக்கு வழி விடலாம். தவறிழைக்கும் தருணங்களில் ஒரு புன்னகையுடன் மன்னிப்பு கேட்டு கடந்து செல்லலாம்.

இவற்றையெல்லாம் விட்டு விட்டு வசனங்களை கண்ணாடியிலும், வெறுப்பை மனதிலும் எழுதியபடி வாகனம் ஓட்டுவதில் எந்த பயனும் இல்லை.

சிந்திப்போம்

சிலுவை மொழிகள் – நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்

நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்

( லூக்கா 23 : 43 )

இயேசுவைச் சிலுவைச் சாவுக்குத் தீர்ப்பளித்த அரசு, அவரை அடித்து, துன்புறுத்தி, அவமானப்படுத்தி, சிலுவை சுமக்க வைத்து கொல்கொதா மலையில் சிலுவையில் அறைந்தது. அத்துடன் நிற்கவில்லை. அவருடைய வலப்புறம் ஒருவனும், இடப்புறம் இன்னொருவனுமாக இரண்டு கள்வர்களையும் சிலுவையில் அறைந்தது.

“யூதர்களின் அரசன்” என நக்கல் தொனியுடன் ஒரு வாசகத்தையும் இயேசுவின் சிலுவையின் உச்சியில் வைத்தார்கள். அங்கே அவர் அருகிலிருந்த ஒரு கள்ளனிடம் சொன்னதே இந்த வாக்கியம்.

கேட்கத் தயாராக இருக்கிறார்.
இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த அந்த வலி மிகுந்த தருணத்திலும், அருகில் இருந்தவர்களின் உரையாடல்களை செவிகொடுத்துக் கேட்கிறார்.

சிலுவையில் உச்சியில் தொங்கிய இயேசுவைப் போன்ற வலியோ, துயரமோ நம்மைச் சந்திப்பதில்லை. அப்படியே சந்தித்தாலும், பிறருக்காய் காதுகளைத் திறந்தே வைத்திருங்கள், என்பதே இயேசுவின் செயல் சொல்லும் செய்தி.

அவமானங்கள் மன்னிக்கப்படும்
இயேசுவின் ஒரு புறம் இருந்த கள்வன் இயேசுவை நோக்கி பேசினான். அவனுடைய குரலில் கேலியும், பழியும் இருந்தது.

“நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று”

இயேசு எரிச்சலடையவில்லை. கோபமடையவில்லை. மௌனமாய் இருந்தார். இயேசுவின் மௌனம் அவருடைய பேரன்பின் வெளிப்பாடு. மரணத்தின் நுனியிலும், அவமானங்களைத் தாங்கிக் கொள்ளும் மனமும், பலமும் வேண்டும் என்பதை இயேசு சிலுவையில் நிகழ்த்திக் காட்டினார்.

சுய பரிசோதனை வாழ்வளிக்கும்
ம‌ற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா நாம் தண்டிக்கப்படுவது முறையே. இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என்று பதிலுரைத்தான்.

இருவருமே திருடர்கள் தான். இருவருமே சிலுவைச் சாவுக்கு தகுதியானவர்கள் தான். ஒருவனுக்கு அது தெரிந்திருந்தது. இன்னொருவனுக்கு அது தெரிந்திருக்கவில்லை. அவ்வளவு தான் வித்தியாசம்.

தன்னை பரிசோதனை செய்ததால் கள்ளன் கூட “நல்ல கள்ளன்” எனும் அடைமொழியைப் பெறுகிறான்.

இயேசுவின் தூய்மையை உணர்தல்
“இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என ஒரு கள்ளன் மற்ற கள்ளனைப் பார்த்துச் சொல்கிறான். “இயேசு குற்றவாளி” என மறைநூலைக் கரைத்துக் குடித்தவர்கள் தீர்ப்பிட்டார்கள். இயேசுவை கூட இருந்தவனே காட்டிக் கொடுத்து காசு வாங்கினான்.

ஆனால் இயேசுவுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஒரு கள்ளன் இயேசுவை குற்றமற்றவர் என சான்று பகர்கிறான். இயேசுவின் ராஜ்யத்தில் பாவிகளும், நிராகரிக்கப்பட்டவர்களும் நுழைவார்கள் என்பதன் இன்னொரு உறுதிப் படுத்துதல் தான் அது எனலாம்.

கேளுங்கள், தரப்படும்.
“இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்றான் அந்த க‌ள்ளன்.

தனது தவறுகள் பாவங்கள் போன்றவற்றைப் புரிந்து கொள்வதும். தான் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் முடிவு நரகம் மட்டுமே என்பதைப் புரிவதும் மீட்பின் முதல் படி. இரண்டாவதாக, இயேசுவின் மீது வைக்கின்ற நம்பிக்கை. மூன்றாவதாக,. இறைவனிடம் தனது மீட்புக்காய் மன்றாடுவது.

ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்னும் வேண்டுதலில் தான் கள்ளனுக்கு மீட்பு கிடைக்கிறது.

தனிப்பட்ட மீட்பு
இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார்.

முதலாவது சிலுவை வார்த்தையான, “தந்தையே இவர்களை மன்னியும்” எனும் வார்த்தையில் ஒட்டு மொத்தமாக பொதுவான ஒரு மன்னிப்பை வழங்கிய இயேசு, தனது இரண்டாவது வார்த்தையின் மூலம் மீட்பு என்பது தனிநபருக்குரியது. ஒவ்வொருவரும் தனித்தனியே மீட்பின் பாதையில் வரவேண்டும் என்பதைப் புரிய வைக்கிறார்.

“கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா?” எனும் கள்ளனின் வார்த்தைகளால் அவனுக்குள் பாவத்தைக் குறித்த அச்சமும், மீட்பின் தாகமும் இருப்பது புரிகிறது. கடவுள் மீது அவன் கொண்ட அச்சமே அவனை மீட்பை நோக்கி வழிநடத்தியது.

மீட்பு உடனடிப் பரிசு
இயேசுவை நோக்கிய விண்ணப்பம் வைக்கிறான் நல்ல கள்ளன். இயேசு, “யோசித்து சொல்றேன்” என்று சொல்லவில்லை.

“இன்றே…” என உடனடி மீட்பை அவருக்கு வழங்குகிறார். அத்துடன் நிற்கவில்லை. “என்னுடன்” என சொல்லி அந்தத் திருடனை திக்குமுக்காட வைக்கிறார் இயேசு.

பேரின்ப வீட்டில் இருப்பது மிகப்பெரிய பாக்கியம் என்றால், அங்கே இயேசுவோடு இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் !

அந்தக் கள்ளனைப் பொறுத்தவரை இயேசுவை அவன் சந்தித்த முதலாவது நிகழ்வு அது. முதல் நிகழ்விலேயே அவன் தனது பாவங்களை உணர்ந்து, இயேசுவிடம் மீட்புக்காக விண்ணப்பிக்கிறான்.

“அறிவிலியே இன்றிரவே உன் உயிரை எடுக்கப் போகிறார்கள்” என்று இயேசு சொன்னது போல, நமது உயிர் எப்போது பிரியும் என்பதை நாம் அறியோம். எனவே இறைவனிடம் கேட்பதில் தாமதம் கூடாது

Thanks to Bro. Xavior

விவிலிய விழாக்கள் 7 கூடாரப் பெருவிழா

இறைவன் இஸ்ரயேல் மக்களிடம் பின்பற்றுமாறு சொன்ன மாபெரும் விழாக்கள் ஏழு. அந்த ஏழு விழாக்களின் கடைசி விழா இந்த கூடாரப்பெருவிழா. இது இஸ்ரயேலர்களின் ஏழாம் மாதமான திஸ்ரியின் பதினைந்தாவது நாளில் தொடங்கி ஏழு நாட்கள் கொண்டாடப்படும் .

“விழாவின் முதல் நாள் ‘திருப்பேரவை கூடும் நாள்’. அந்த நாளில் எந்த வேலையும் செய்யாமல் எல்லோரும் ஓய்வாய் இருக்கவேண்டும். எட்டாம் நாள் மீண்டும் திருப்பேரவை கூடும் நாள் ! அது நிறைவு நாள். அந்த எட்டு நாட்களும் தவறாமல் கடவுளுக்குநெருப்புப் பலி செலுத்த வேண்டும். அந்த ஏழு நாட்களும் இஸ்ரவேல் மக்கள் கூடாரங்களில் குடியிருக்க வேண்டும். “ என்பதே இறைவன் கொடுத்த கட்டளையின் சுருக்கம்.

எகிப்தில் அடிமையாய் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் அந்த நாட்டை விட்டு கடவுளின் அருளால், மோசேயின் தலைமையில்வெளியேறியபின் கூடாரங்களில் குடியிருந்தார்கள். அந்த நினைவை புதுப்பித்துக் கொள்ளும் விதமாக இந்த விழாநாட்களில் இஸ்ரயேலர்கள் அனைவரும் கூடாரங்களில் குடியிருந்தார்கள்.

சாலமோன் மன்னனும் இந்த பண்டிகையைத் தவறாமல் கொண்டாடினார் என்கிறது 2 குறிப்பேடு 8:13. “ஆண்டுதோறும் வரும் புளியாத அப்பத் திருவிழா, வாரங்களின் திருவிழா, கூடாரத் திருவிழா ஆகிய மூன்றுவிழாக்களிலும், அந்தந்த நாளுக்குரிய பலிகளைச் செலுத்தினார்” என விவிலியம் விளக்குகிறது.

இறைவன் காட்டிய பேரன்பை அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் மிகப்பெரிய பணியை இத்தகையவிழாக்கள் செய்கின்றன. குறிப்பாக தகவல்தொழில்நுட்பங்கள் வலுவாக இல்லாத பண்டைய காலங்களில் இத்தகைய செய்திகளைநினைவுகூர விழாக்களே அடிப்படைக் காரணிகளாக இருந்தன.

பாலை நிலத்தில் அலைந்து திரிந்த நாற்பது வருடங்களும் இறைவன் அவர்களை பல அதிசயங்கள் மூலம் ஆசீர்வதித்துவழிநடத்தினார். அவர்கள் உண்ண தினமும் வானிலிருந்து மன்னா எனும் உணவு வழங்கினார். இஸ்ரயேலர் கூட்டம் , பெண்கள்குழந்தைகள் உட்பட, மொத்தமாக 20 இலட்சம் பேர் இருந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அப்படிப்பார்த்தால் தினமும் மூன்று வேளை சாப்பிட அவர்களுக்குத் தேவையான பல இ லட்சம் மன்னா தேவைப்பட்டிருக்கும். அப்படியே நாற்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக சாப்பிட எவ்வளவு தேவைப்பட்டிருக்கும் ? இவை கடவுளின் மிகப்பெரிய அற்புதமன்றிவேறு எந்த விதமாகவும் நடந்திருக்க சாத்தியமே இல்லாத ஒன்று !

அதே போல அவர்கள் இறைச்சி வேண்டும் என கேட்டபோது இறைவன் பறவைகளை அவர்களுடைய கூடாரங்கள் அருகேவிழவைத்தார். அத்தனை கூட்டம் கூட்டமான பறவைகள் வந்து விழுவது இறைவனின் அதிசயச் செயல் அன்றி வேறில்லை. தாகம்எடுத்த போது மோசே பாறையில் அடித்தார். தண்ணீர் பாய்ந்தோடியது. இத்தனை இலட்சம் பேர் குடிக்க வேண்டுமெனில் தண்ணீர்ஒரு ஆறு போல பாய்ந்திருக்க வேண்டும். ஏனென்றால் இத்தனை மக்கள் பேரணியாகச் சென்றாலே பலப் பல கிலோமீட்டர் நீளமாய்அந்த பேரணி இருந்திருக்கும்

இப்படி இறைவன் செய்த அதிசயங்களை நினைவு கூரும் விதமாகக் கொண்டாடப்படுவது தான் கூடாரப் பெருவிழா. இந்தநாட்களில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது இறைவன் இவர்களுக்குக் கொடுத்த ஒரு கட்டளை ! இந்த விழாவைக்கொண்டாடாதவர்கள் அழிவுக்குள்ளாவார்கள் என செக்கரியா 14ம் அதிகாரம், அன்றைய மக்களை எச்சரித்தது.

புதிய ஏற்பாட்டில் இந்த விழா இயேசுவின் இரண்டாம் வருகை தரப்போகும் ஆயிரம் ஆண்டைய அரசாட்சியை குறிப்பால்உணர்த்துகிறது. பாவம் எனும் பாலை நிலத்தில் இத்தனை ஆண்டுகள் அலைந்து திரிந்த நாம், இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டுஅவரது அன்பில் இணைகிறோம். இதுவே புதிய ஏற்பாட்டு சிந்தனை.

இறைமகன் இயேசுவும் தான் மனிதனாக வாழ்ந்த காலத்தில் இந்த விழாவைக் கொண்டாடினார். இந்த விழாவில் வெளிச்சமும், தண்ணீரும் குறியீடுகளாக உள்ளன. அதை வெளிப்படுத்தும் விதமாகத் தான் இயேசு, விழாக்காலத்தில் ஆலய பகுதியில் நின்றுகொண்டு, ““யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். மறைநூல் கூறுவதுபோல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்” என அறைகூவல் விடுத்தார்.

இந்த காலத்தில் கூடாரவிழாவானது புதிய அர்த்தத்தை நமக்குத் தருகிறது. முதலில் இது இயேசுவின் இரண்டாம் வருகையையும், அவர் நம்மோடு ஆளப்போகின்ற ஆயிரம் ஆண்டு ஆட்சியையும் குறிப்பிடுகிறது. அவர் நம்மோடு கூடாரமடித்து தங்குவார் எனும்நம்பிக்கை விழாவாக இது அமைகிறது. இன்னொன்று, ‘வார்த்தையான இறைவன் நம்மிடையே குடிகொண்டார்” எனும் முதல்வருகையின் நினைவு கூர்தலாகவும் அமைகிறது.

இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக, நமது பாவங்களை விட்டு விலகி அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். இயேசுவின் இரண்டாம் வருகையின் போது அவரால் நிராகரிக்கப்படுபவர்களாக இல்லாமல், வரவேற்கப்படுபவர்களாக இருக்க முயற்சிகள்மேற்கொள்ள வேண்டும். இதையே இந்த விழா நமக்கு எடுத்துச் சொல்கிறது

Thanks to Bro.Xavior

கர்ப்பிணியை நிர்வாணமாக்கி சாலையில் நடக்கவைத்த கொடூரம்; ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி

Aug 4, 2024, 5:29

ராஜஸ்தான் மாநிலம் நிக்லகோட்டா கிராமத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி 7 மாத கர்ப்பிணியை அவரது கணவர் உட்பட 17 பேர் நிர்வாணமாக்கி சாலையில் கட்டாயப்படுத்தி நடக்கவைத்து துன்புறுத்தி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து அப்பெண் காவல் நிலையதில் தன்னை துன்புறுத்தியவர்களுக்கு எதிராக புகார் அளித்தார்

கர்ப்பிணி பெண்ணின் புகார் குறித்து மாவட்ட காவல்துறை சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை மேற்கொண்டது. வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் பெண்ணை கொடுமை படுத்திய கணவர் உள்பட 17 நபர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் இதே வழக்கில் தொடர்புடைய 3 பெண்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டில் பெண்கள் தெய்வங்களுக்கு இணையாக மதிக்கப்பட்டனர். பழங்காலத்தில் வேதங்களில் பெண்கள் கௌரவிக்கப்படுகின்றனர். ஆனால், தற்போது கலியுகத்தில் பெண்கள் மீதான வன்முறையும், அட்டூழியங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதே போன்ற குற்றம் மணிப்பூரிலும் நடைபெற்றது. இத்தகைய குற்றங்கள் பெண்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையாக காயப்படுத்துகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

thanks to asianet news tamil

49 பெண்களுக்கு காதல் வலை, 5 முறை திருமணம்; காதல் மன்னனை பொறி வைத்து பிடித்த போலீஸ்

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யஜித் சமால்(வயது 34). திருமணத்திற்கு வரன் தேடும் வலைதளங்களில் பதிவு செய்யும் விதவைகள், விவகாரத்தான பெண்களை குறி வைத்து சமால் தனது காதல் வலையை விரித்துள்ளார். இதில் மயங்கும் பெண்களிடம் தாம் ஒரு போலீஸ் அதிகாரி என்று அறிமுகமாகி பின்னர் அவர்களுடன் நட்பாக பழகத் தொடங்கி உள்ளார்.

5 திருமணம்

பின்னர் அவர்களை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அவர்களிடம் பணத்தை பெற்றுள்ளார். ஒவ்வொரு பெண்ணிடமும் இதே முறையை பயன்படுத்திய சமால் இதில் 5 பெண்களை ஒரே நேரத்தில் திருமணமும் செய்துள்ளார். திருமணம் செய்து கொண்டு பணத்தை பெற்றுவிட்டு அவர்களுடன் வாழ மறுப்பு தெரிவித்ததாகக் கூறி இரு பெண்கள் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

பொறி வைத்த போலீஸ்

ஒரே நபர் மீது இரு பெண்கள் வெவ்வேறு நேரங்களில் புகார் அளித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சமாலை கைது செய்ய திட்டமிட்ட காவல் துறையினர், பெண் போலீஸ் அதிகாரியின் தகவல்களை வரன் பார்க்கும் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதனை பார்த்து தொடர்பு கொண்ட சமாலை லாவகமாக பேசி கைது செய்தனர். 

மோசடி

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காவல் துறையினரே ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மொத்தமாக 49 பெண்களுடன் சமால் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரு பெண் சுமார் 8 லட்சம் வரையில் அவர் பெயரில் வங்கியில் தனிநபர் கடன் பெற்று சமாலுக்கு காரை பரிசாக வழங்கி உள்ளார். வேறொரு பெண் சுமார் 30 லட்சம் வரை தொழில் தொடங்குவதற்காக சமாலுக்கு வழங்கி உள்ளார். 

கைது – கைது செய்யப்பட்ட சமாலிடம் இருந்து ஒரு கார், விலை உயர்ந்த இருசக்கர வாகனம், 2.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

thanks to asianet news tamil