• Thursday 1 May, 2025 05:17 PM
  • Advertize
  • Aarudhal FM

சகலமும் சந்தை மயம்

ஆசிரியர்: டேவிட் தன்ராஜ்

இறைவன் கொடுத்த 

இலவச தண்ணீரை-மனிதன்

பைகளில் அடைத்து

பணம் பண்ணுகிறான்

உடுப்பு கடைக்கு

உடையெடுக்கச் சென்றால்-வியாபாரி

உடுத்தி இருப்பதையும்

உருவப் பார்க்கிறான்

மழைக்குக் காரணமான

மரங்களை அழித்து விட்டு

மழைக்கு யாகம் பண்ணுகிறான்

மனிதன் மாயம் பண்ணுகிறான்

கார்ப்பரேட்டு களவாணிக்கு

காவல் பண்ணுகிறான் – அதுவே

ஏழைகள் என்றால் 

ஏளனம் பண்ணுகிறான்

மனசாட்சி செத்தவன்

மருத்துவன் ஆகிறான்

மருத்துவம்  வியாபாரமானதால்

மனித நேரத்தை மறந்து போகிறான்

மெய்யை மைய்யால் மறைத்து

பொய்யை பரப்புகிறான்

பத்திரிகை யாளன் -தன்

பையை நிரப்புகிறான் 

நவீன இசையுடன்

நயவஞ்கத்தை கலந்து

உலாவவிடுகிறான் – ஊடகத்தான்

ஊசியில் விஷம் ஏற்றுகிறான்

விளைச்சல் நிலங்களை

வீட்டு மனையாக்கிவிட்டு – வியாபாரி

விலைவாசி உயர்வு என்று

வேடம் போடுகிறான்

நலிந்தவன் நம்பிக்கையோடு

நீதிமன்றம் நாடுகிறான்

நீதியரசரோ வழக்கில்

நீசருக்கு துணைபோகிறான்

சாலையோர சிற்றண்டிகள்

சாகக்கிடக்குது-அந்நிய

மெக்டொனால்டும் கேஎப்சியும்

மொத்தத்தையும் வாரிச்சுருட்டுது

சமுதாயத்தின் அவலங்களை

சிந்திக்காத கிறிஸ்தவனே

சபையில் நிரம்பி வழிகிறான்

சவாலகளை சந்திக்க மறுக்கிறான்

சிந்திக்க மறுத்து கிறிஸ்தவன்

சீரழிந்து போகிறான்

சமூகத்தை மறந்து- சபையில்

சத்தம் போடுகிறான்

விசாவுக்கு ஜெபம்

வேலைக்கு ஜெபம் – என்று

கோபுரம் கட்டுகிறான்-மதவாதி

கல்லாவை நிரப்புகிறான்

கிறிஸ்தவன் திருந்துவது-எப்போது

கேடுகள் மறையும் அப்போது

சிந்தித்தால் மலரும் புதுயுகம்

சாதிக்க முயலுவோம் அனைவரும்

கர்த்தர் தந்த கருவிகளை . . . . . .

ஆசிரியர்: டேவிட் தன்ராஜ்

இறைவனுடன் இடைப்படும் நேரத்தில்

இனிய ஒலியெழுப்பி

இடையூறு செய்கிறது

இரக்கமற்ற கைப்பேசி

அன்பான மனைவியுடன்

அளவளாவிடும் நேரத்தை

அளவில்லாமல் அபகரிக்கிறது

ஆபத்தான அலைபேசி

களைத்து வரும் கணவருக்கு

களைப்பு தீரும் நேரத்தை

கருணையே இல்லாமல்

களவாடுகிறது கைப்பேசி

குழந்தைகளுடன் கொஞ்சும் நேரத்தில்

குறுக்கே வந்து

குழப்பம் தருகிறது

கொலைகார தொலைபேசி

பள்ளிச் சென்றிடும் பிள்ளைகளை

பாழும்கிணற்றில் தள்ளிவிட

பாதைக் காட்டி வருகிறது

பாழாய்போன தொலைபேசி

பெற்றோர் பிள்ளை உறவுகளை

பிரித்து வைத்து 

பதம் பார்த்து

பேதம்பண்ணுது தொலைபேசி

மெய்தகவலை பொய்யென்றும்

பொய்தகவலை மெய்யென்றும்

புளுகிவருகுது புரட்டி வருகுது

புண்ணாக்கு தொலைபேசி

உழைப்பை கெடுத்து

உணவை தடுத்து

உயிரை வாங்குது

உதவாக்கரை தொலைபேசி

காதல் வலையில் தள்ளுகிறது

காமப்பசிக்கு அழைக்கிறது

கயவர்கள் கையிலுள்ள

 களவாடிய கைப்பேசி

கர்த்தர் தந்த கருவிகளை

கருத்தாய் பயன்படுத்தி

கர்த்தருக்கு மகிமையை

கருத்தாய் செலுத்திடுவோம்

காணாமல் போன மேய்ப்பன்….

ஆசிரியர்: டேவிட் தன்ராஜ்

நாதன் இயேசு சொன்ன
நல்ல மேய்ப்பனைத் தேடி
நாளும் கடந்து வந்தேன்
நல்ல தொழுவம் நாடி

அழுக்காக இருப்பதைக் கண்டு
அகன்று போ என்றார்
அற்புதங்களைச் செய்யும்
அழகிய மேய்ப்பர் ஒருவர்

படிப்பு வாசனையில்லை என்று
பழகிட மறுத்தார்-பல
பட்டங்களைப் பெற்ற
பரம்பரை மேய்ப்பர் ஒருவர்

ஒழுக்கத்தை ஓய்வுநாள் தோறும்
ஓயாமல் பிரசங்கம் செய்தார்
ஒழுக்கமில்லா பிள்ளை வளர்த்த
ஒய்யார மேய்ப்பன் ஒருவன்

எளிமையை வேடமிட்டு
ஏழைகளைக் கொள்ளையிட்டு
ஏராளமாய் சேர்த்தார்
ஏமாற்று மேய்ப்பர் ஒருவர்

பாமர ஆடுகளிடம்
பாசம் காட்ட மறுத்தார்
பங்களா ஆடுகளைத் தேடும்
பணக்கார மேய்ப்பர் ஒருவர்

பரிதபிக்கும் ஆட்டைக் கண்டு
பாச மழை பொழிந்தது
பட்சிக்கும் ஓநாய் ஒன்று
பாதிரியார் உருவத்திலே

நல்மேய்ச்சல் தருவாரென்று
நம்பிக்கையோடே நானிருந்தேன்
அமெரிக்காவே தரிசனமென்று
அதிரடியாய் பறந்துபோனார்

இயேசுவின் வார்த்தைப்படி
இனிய மேய்ப்பன் கிடைப்பானென்று
இயன்ற மட்டும் தேடினேன்
இன்று வரை கிடைக்கவில்லை

உன்னதர் இயேசு சொன்ன
உயிரைக் கொடுக்கும் மேய்ப்பன்
உங்களில் யாரும் உண்டோ?
உண்மையைச் சொல்லுங்களேன்

காணாமல் போன நல்மேய்ப்பனைக்
கண்டு பிடித்துத் தருவீரென்றால்
கடைசிவரை அடங்கியிருப்பேன்
கர்த்தரின் தொழுவத்தில்…

இயேசு கிறிஸ்து யார்? பரமபிதா யார்? பிதா தேவாதி தேவன் யார்? தேவன் யார்?யார்?

இதை படிப்பவர்களுக்கு இனி இயேசு கிறிஸ்துவைக் குறித்த எந்த சந்தேகமும் அவர்கள் வாழ்க்கையில் வரவே வராது ஆனால் நீங்கள் சற்று புரிந்து,ஆழமாக ஆராய்ந்து,வசனத்தை பகுத்தறிந்து படிக்க வேண்டும் என்பது மிக முக்கியமாகும். இதை புரிந்துக்கொள்ளாதவர்கள் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு வழிவிலகிப்போக அதிக வாய்ப்புள்ளது. அனேக கிறிஸ்தவர்களுக்கே இன்னும் இந்த காரியங்கள் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.இதனால் தவறான உபதேசம் செய்கிறார்கள்.

இயேசுவிடம் அதிசயம் பெற்று அவருக்கு சாட்சியாக புதிதாக ஊழியத்திற்கு வந்த ஊழியக்காரர்கள் கட்டாயம் இந்தப்பதிவை முழுமையாக படியுங்கள்.சந்தேகம் ஏதும் இருந்தால் உடனே என்னை கூப்பிடுங்கள். நன்றி

பிதா என்றால் தகப்பன்,தந்தை என்று அர்த்தம். பைபிள் நம்முன்னோர்களைக்கூட முற்பிதாக்கள் என்றுதான் அழைக்கிறது.நம் பூர்வீக தமிழ் அகராதிகளும் மாதா,பிதா,குரு,தெய்வம் என்று கூறுகிறது. இங்கும் பிதா என்பது தந்தையை குறிக்கிறது.

தேவன் என்றால் கடவுள் என்று அர்த்தம்.

தேவாதி தேவன் என்றாலும் கடவுள் என்றுதான் அர்த்தம். கர்த்தர் என்றாலும் கடவுள் என்றுதான் அர்த்தம். பழைய ஏற்பாட்டில் அனேக இடங்களில் தேவனை  கர்த்தர்,ஆண்டவர் என்று சொல்லப்பட்டுள்ளது,அதே போல் புதிய ஏற்பாட்டிலும் இயேசு கிறிஸ்துவை அனேக இடங்களில் நேரடியாகவே கர்த்தர்,ஆண்டவர் என்று சொல்லப்பட்டுள்ளது. 

இயேசு கிறிஸ்துவை பைபிள் தேவன் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

ஏசாயா தீர்க்கதரிசி இயேசுவை பிதா மற்றும் தேவன் என்று (அதாவது கடவுள் என்று ) தெளிவாக இங்கு குறிப்பிடுகிறார்

(நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.ஏசாயா 9:6

இந்த வசனத்தில் இயேசுவை பிதா என்றும், தேவன் என்றும் தெளிவாக குறிப்பிடப்படுகிறது.)

மேலும் பரிசுத்த தோமா அவர்கள் இயேசுவை என் தேவனே என்று அழைக்கும்போது இயேசு அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் அப்படியே அதை ஏற்றுக்கொண்டார்! இதோ ஆதாரம்

(தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். யோவான் 20:28)

இயேசுவின் சொந்த சீஷரான பரிசுத்த யோவான் இயேசுவை தேவன் என்று (அதாவது கடவுள் என்று ) தெளிவாக கீழே குறிப்பிடுகிறார்

நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார். 

1 யோவான் 5:20

யோவான் 1:1-14

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது (தேவாதிதேவனிடத்திலிருந்தது) அந்த வார்த்தை தேவனாயிருந்தது.அவர் (இயேசு)ஆதியிலே தேவனோடிருந்தார்.

சகலமும் அவர் மூலமாய் (இயேசு மூலமாய்) உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.

உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் (இயேசு) மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு (பரமபிதாவுக்கு) ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. யோவான் 1:1-14

அதே நேரத்தில் இயேசு கிறிஸ்து  பிதாவே என்று சொல்லி வணங்கியவர் பரமபிதாவாகிய தேவாதி தேவனைதானேதவிர வேறுயாரையும் இல்லை. அதாவது எல்லாவற்றிற்கும் முதன்மையான பரம தகப்பனை,பரம தந்தையைதான் பிதாவே என தொழுதுக்கொண்டார்.

➡தேவாதி தேவனும் கடவுள்தான்,தேவன் என்பதும் கடவுள்தான். இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான். ஆனால் பரமபிதாவானர் வேறு ஒருவர்,நமக்கு இந்த பூமிக்கு பிதாவாகிய இயேசு கிறிஸ்து வேறு ஒருவர்! ஆனால் இருவரும் ஒன்றாயிருக்கிறார்கள். அதாவது ஒரே நிலையில், ஒரே சிந்தனையில் ,ஒரே செயல் உடையவர்களாக இருக்கிறார்கள்!!  பரமபிதவினுள் இயேசுவும், இயேசுவுக்குள் பரமபிதாவும் இருக்கிறார்.பரமபிதாவின் சொந்த குமாரன்தான் தேவனாகிய இயேசு கிறிஸ்து. 

எனவே பரமபிதா என்பதும் தகப்பன்,தந்தை என்றுதான் பொருள்படும்,

அதேபோல் பிதா என்பதும் தகப்பன்,தந்தை என்றுதான் பொருள்படும். பரமபிதாவானவர் எல்லாவற்றிற்கும் முதன்மையான தந்தை என்பவராவார்.

இயேசுவையும் பைபிள் நித்திய பிதா,வல்லமையுள்ள தேவன் என தெளிவாக கூறுகிறது.எனவே இயேசு கிறிஸ்துவும் நமக்கு தகப்பன்,தந்தை,கடவுள் என்று பொருள்படக்கூடிய பிதா,தேவன் என்பவராவார்.

மாமிசத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய,தேவனாகிய இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடாதவர்கள் யாவரும் அந்தி கிறிஸ்துவின் ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள்.

ஒட்டுமொத்த பைபிளிலும் கீழே உள்ள வசனங்களில் மட்டுமே பரமபிதா என்ற வார்த்தையும்,தேவாதி தேவன் என்ற வார்த்தையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தவிர வேறெங்கும் குறிப்பிடப்படவில்லை. இயேசு கிறிஸ்து பிதா என்று அழைத்தவர் பரமபிதாவை மாத்திரமே. இவரைத்தான் உலகம் ஆதிமுதலாகவே பார்த்ததேயில்லை என்றும்,அவரிடம் யாரும் பேசியதுமில்லை ,அவர் இருக்கும் இடத்திற்கு இதுவரை யாருமே போனதுமில்லை என்று பைபிள் நமக்கு தெளிவுப்படுத்துகிறது. இயேசுவே இதை நேரடியாகவும் சொல்லுகிறார். மேலும் இயேசுவே ஆதிமுதலாக உலகத்தில் இருந்தார் என்பதை அவரே நேரடியாக சொல்லுகிறார்,பைபிளில் பல இடங்களிலும் இயேசு ஆதிமுதலாகவே இருந்து உலகத்தில் எல்லாவற்றையும். அவரே படைத்தார் என்றும் உள்ளது. எல்லாவற்றையும் அவருக்கென்றே இயேசுவே படைத்தார் என்றும் உள்ளது.

வார்த்தை: பரமபிதா (ஆதியாகமம் – வெளி)

மத்தேயு 6:14 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.

மத்தேயு 6:26 ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

மத்தேயு 6:32 இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

மத்தேயு 15:13 அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.

மத்தேயு 18:10 இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 18:35 நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

வார்த்தை: தேவாதி (ஆதியாகமம் – வெளி)

உபாகமம் 10:17 உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம்பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.

யோசுவா 22:22 தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலரும் அறிந்துகொள்வார்கள்; அது இரண்டகத்தினாலாவது, கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருக்கக்கடவர்.

சங்கீதம் 136:2 தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

தானியேல் 11:36 ராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, தேவாதி தேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்; கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைகூடிவரும்; நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும்.

(*குறிப்பு :பைபிளில் புதிய ஏற்பாட்டில் பரிசுத்த மத்தேயு அதிகாரத்தில் மட்டுமே பரமபிதா என்ற வார்த்தை உள்ளது! )

பரமபிதா,பிதாவகிய இயேசு கிறிஸ்து,பரிசுத்த ஆவியானவர், இவர்கள் மூவரும் தனித்தனி நிலையில் இருந்தாலும் அனைவரும் அவர்களுடைய எண்ணத்தினாலும்,கிரியையினாலும்,செயல்களினாலும் ஒன்றாய் இருக்கிறார்கள் என பைபிள் தெளிவாக  சொல்லுகிறது. இதுதான் திரித்துவ தேவன்,திரித்து கடவுள் என்பதாகும். That is Trinity. 

பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். 

1 யோவான் 5:7

➡என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார் என்று இயேசு சொன்னார். யோவான் 14:26

பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார் என்று இயேசு சொன்னார். யோவான் 15:26

நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன் என்று இயேசு சொன்னார். யோவான் 16:7

வார்த்தையாக அதாவது ஒலியாக இருந்து மாமிசமாக வெளிப்பட்டவர்தான் இயேசு கிறிஸ்து. இயேசு கிறிஸ்து என்ற பெயரே மனிதனால் நியமிக்கப்பட்டது அல்ல ,அது பரமபிதாவாகிய தேவாதி தேவனாலே கொடுக்கப்பட்டது.

எனவே நான் இறுதியாக சொல்லிக்கொள்வது என்னவென்றால் “Jehovah Witness” என்ற அமைப்பை சார்ந்தவர்கள் பிதா ஒருவரே,அவரே ஒரே  தேவன் என்றும்,இயேசு தேவனே அல்ல அதாவது கடவுளே அல்ல என்றும், அவர் ஒரு படைக்கப்பட்ட தீர்க்கதரிசி என்றும் சொல்லுகிறார்கள்! அவர்கள் அந்திக்கிறிஸ்துவின் ஆவியினால் சிக்குண்டவர்கள்!! இவர்கள் கள்ள உபதேசக்காரர்கள்!!! இவர்களை விட்டு விலகவேண்டும்,அதே நேரத்தில் இப்படிப்பட்டவர்களைப்பற்றி எல்லாருக்கும் சொல்லி மற்றவர்களையும் எச்சரிக்க வேண்டும்.

மேலும் “Only Jesus” என்ற அமைப்பினர் எல்லாம் இயேசு மாதிரமே என்று சொல்லி பரமபிதாவை,தேவாதி தேவனை இல்லையென்று  மறுதலிக்கிறார்கள்! அப்படிப்பட்ட அவர்களும் அந்திக்கிறிஸ்துவின் ஆவியினால் சிக்குண்டவர்கள். இவர்களும் கள்ள உபதேசக்காரர்கள். இவர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த Jehovah witness அமைப்பைச் சேர்ந்தவர்கள் தற்சமயம் வேதாகம ஆராய்ச்சியாளர்கள்,Bible students,வேதாகம சங்கத்தை சேர்ந்தவர்கள் என்று தங்கள் நிலைகளையும்,பெயர்களையும் மாற்றிக்கொண்டு மக்களை கள்ள உபதேசங்களால் வஞ்சித்துப்போட்டு வருகிறார்கள். 

மேலும் ஊரிம் தும்மீம் கொண்ட ஏழாம் தூதன் என்றும் சிலர் தங்களை சொல்லிக்கொண்டு வருகிறார்கள். இவர்களையும் நம்பவே. கூடாது! ஒரு தூதன் மனிதனாக அவதாரம் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. பைபிளிலும் அப்படி ஏதும் சொல்லப்படவே இல்லை. இயேசு ஒருவரே மனித அவதாரம் எடுத்தார் என சொல்லப்பட்டுள்ளது. ஊரிம் தும்மீம் என்பது பழங்காலத்தில் பரிசுத்தாவான்கள் தங்களின் மேல் ஆடையில், இருதயத்திற்கு அருகில் குத்திக்கொள்ளக்கூடிய ஒரு பட்டையாகும் என்று பைபிள் கூறுகிறது அதாவது அது ஒரு batch ஆகும்.

கிறிஸ்தவர்களே நிறையேபேர் இவர்களின் வலையில் சிக்கிக்கொள்கிறார்கள் என்பதுதான் மிகக்கொடுமையான, வேதனையான செய்தியாகும். எனவே எல்லாரும் இனி எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்த பதிவை மிகத்தெளிவாக புரியும்படி அனேக பைபிள் ஆதாரத்துடன்  பதிவிட்டுள்ளேன். 

இனி பரமபிதாவைக்குறித்தும்,நமது பிதாவாகிய இயேசுவை குறித்தும் எந்த சந்தேகமும் இனி உங்களுக்கு வரவே கூடாது. இயேசு கிறிஸ்து மிகத்தெளிவாக சொல்லுகிறார் இதுவரை பூமியில் யாரும் பரமபிதாவுடன் பேசியதும் இல்லை,அவரை பார்த்ததும் இல்லை என்று! அவர் இடத்திற்கு யாரும் போனதும் இல்லையென்றும் சொல்லுகிறார்!! என்னையன்றி ஒருவரும் பரமபிதாவிடம் நேரடியாக போகவே முடியாது என்றும் உறுதியாக, தெளிவாக சொல்லுகிறார். பிதாவை எங்கும் தொழுதுக்கொள்ளும் காலம் வரும் என்று இயேசு சொன்னது அவர் தன்னைக்குறித்தே சொன்னார் ஏனெனில் இன்று உலகில் இயேசுவைத்தான் எல்லா இடங்களிலும் தொழுதுக்கொள்கிறார்கள்.

மேலும் இயேசு கிறிஸ்து நம்மிடத்தில் சொன்னால் புரியாது என்று சொல்லாமல்போன பரம ரகசியம் இதுவே. இதை அவரே பைபிளில்  தெளிவாக கூறுகிறார்.

(இயேசு: பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? என்றார். யோவ 3:12)

எனவே பரமபிதாவானவர் அண்ட சராசரங்கள் யாவையும் உண்டு பண்ணியவராக இருக்கவேண்டும். ஆனாலும் இயேசு கிறிஸ்துவும் ஆதியும் அந்தமும்,ஆல்பாவும் ஒமேகாவுமாகவும் இருந்து சதாகாலத்திற்கும் ஜீவித்து அரசாளுகிறவர் என பைபிள் தெளிவாக  சொல்லுகிறது. மேலும் ஆபிரகாம் தோன்றுவதற்கு முன்பிருந்தே பூமியில் இயேசு இருக்கிறார்! இதோ ஆதாரம்

அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

யோவான் 8:58

இயேசுவே முதன்முதலில் பூமியில் மனிதன் முதலாக அனைத்து உயிரினங்களையும் படைத்தவர் என பைபிள் தெளிவாக கூறுகிறது. இதோ ஆதாரம்

➡1 கொரிந் 8:6

பிதாவாகிய(பரமபிதாவாகிய) ஒரே தேவன்(தேவாதிதேவன்) நமக்குண்டு, அவராலே சகலமும்(அண்ட சராசரம் எல்லாம்) உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் (இயேசு கிறிஸ்து மூலமாய்ச்) சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் (இயேசு )மூலாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 1 கொரிந் 8:6

கொலோ 1:14-16

அவருக்குள்(இயேசுவுக்குள்), அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. அவர் (இயேசு)அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் (இயேசுவுக்குள்) சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. கொலோ 1:14-16

ரோமர் 11:33-36,

ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! 

கர்த்தருடைய (இயேசுவினுடைய) சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? 

தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? 

சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென் என்று பைபிளில் எழுதப்பட்டுள்ளது. பைபிள் இயேசுவை பல இடங்களில் கர்த்தர் என்று சொல்லுகிறது என்பதை நினைவுக்கூறுங்கள். கர்த்தர் என்றால் கடவுள் என்று பொருள். மேலும் இயேசுவை தேவன் என்றும பைபிள் கூறுகிறது. அவரே நியாயத்தீர்ப்பு கொடுக்கப்போகிறவர் என்றும் பைபிள் சொல்லுகிறது. ரோமர் 11:33-36

லூக்கா 10:22

சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்.

லூக்கா 10:22, 

இயேசுதாமே அவரை உங்களுக்கு வெளிக்காட்டாமல் யாரும் அவரை யாரென்று புரிந்துக்கொள்ளவே  முடியாது.சாத்தானுக்கே இயேசு கிறிஸ்து பரமபிதாவின் குமாரன் என்று மட்டும்தான் தெரியும் ஆனால் அவர் தேவன்(கடவுள்) என்பது தெரியாது என நினைக்கிறேன் அதனால்தான் அவன் அது தெரியாமல் இயேசுவை வனாந்தரத்தில் சோதித்தான்.

இப்போது உங்களுக்கு எல்லாம் புரிகிறதா? எல்லாவற்றையும் பைபிள் வசனங்களை ஆதாரமாக வைத்தே உங்களுக்கு விளக்கியுள்ளேன். 

எனவே இயேசுவே பூமிக்கு நித்தியபிதா!

நித்திய பிதா என்றால்

பூமியிலுள்ள அனைத்தையும் படைத்த இயேசு கிறிஸ்துவே பூமிக்கு ராஜாவாகவும்,பூமிக்கு பிதாவாகவும்,தேவனாகவும் சதாகாலத்திற்கும் இருப்பார் என்று அர்த்தம். பரமபிதாவாகிய தேவாதி தேவனானவர் சதாகாலத்திற்கும் அண்ட சராசரத்திற்கும் பரமபிதாவாகவும், தேவாதி தேவனாகவும் இருப்பார். இயேசு கிறிஸ்து இவரின் சொந்த நேசகுமாரன்.

இப்போது உங்களுக்கு எல்லாம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.இதற்கு பிறகும் இன்னும் இது புரியாதவர்கள் கள்ள உபதேசக்காரர்களாக இருப்பார்கள்,கள்ள போதகர்களாகவும்,கள்ள ஊழியக்காரர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் அந்திக்கிறிஸ்துவின் ஆவி உடையவர்களாகவும் இருப்பார்கள்.

நமக்கு இந்த பூமியில் இயேசு கிறிஸ்து ராஜாவாகவும்,பிதாவாகவும்,தேவனாகவும் இருக்கும் பட்சத்தில் பரமபிதாவை நேரடியாக தொழுதுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமே இல்லை, ஏனெனில் என்னை அறியாதவன் பரமபிதாவை அறியான் என இயேசு தெளிவாக கூறுகிறார். அதேபோல் பரமபிதாவும் இயேசு பூமியில் இருக்கும் பட்சத்தில் உங்களிடம் நேரடியாக வந்து பேசவேண்டிய அவசியமும் இல்லவே இல்லை. காட்சிக்கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லவே இல்லை. இதுவரை பூமியில் இப்படி நடக்கவே இல்லை. தயவுசெய்து இதை இனிமேலாவது நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள். வேத வசனங்களை நன்றாக படித்து பகுத்தறிந்து ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்றே பைபிள் நமக்கு உணர்த்துகிறது.

முடிவுரை: கட்டாயம் இதை படியுங்கம்,ரகசியம் உள்ளது!

இயேசு கிறிஸ்து என்பவர் பரமபிதாவாகிய தேவாதி தேவனின் சொந்த குமாரனாகிய, இந்த பூமிக்கு பிதாவும்,தேவனுமாகவும் இருக்கிறவர்.

இதைத்தான் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் மிகுந்த ஆதாரத்துடன் பைபிளிலிருந்தே வசனத்தின் அடிப்படையில் தெளிவாக விலக்கிவிட்டேன். இதைப்புரிந்துக்கொள்ளாத கிறிஸ்தவர்கள் பரமபிதாவையும், பிதாவாகிய இயேசுவையும் தனித்தனியாக பிரித்து தவறாகவே புரிந்துக்கொண்டு வாழ்வார்கள்!

⭕மேலும் ஒரு மிக முக்கியமான விஷயத்தை சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன். தயவுசெய்து யாரும் இயேசுவின் தாயாகிய மேரி மாதா என்ற மரியாளை கடவுளாக வணங்காதீர்கள். அவர் கடவுள் அல்லவே அல்ல. மேரி மாதா சிலையினுள் இருந்து பேசுவதை அசுத்த ஆவி,அந்த சிலையிலிருந்து வடிகிற இரத்தம் பிசாசினால் நடப்பிக்கிற பொய்யான அதிசயம் மற்றும் அற்புதம். பைபிளில் எந்த இடத்திலும் மரியாளை கடவுளாக வணங்கவேண்டுமென்று சொல்லவே இல்லை. பத்தாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை மரியாளை யாரும் வணங்கவில்லை! அதற்குப்பின் வந்த போப்பாண்டவர் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு மரியாளை கடவுள் என்று வணங்கச்செய்துவிட்டார். இதுதான் உண்மை. இதைத்தான் மார்ட்டின் லூதரும் கண்டுபிடித்தார். உலகம் கடைசிவரைக்கும் இப்படியாகத்தான் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு சத்தியத்தை அறியாமல் இருக்கும். கொஞ்ச மக்களால் மட்டுமே உண்மையை,சத்தியத்தை உணர்ந்துக்கொள்ள முடியும்.

AG தமிழ் நாடு வேதாகம கல்லூரியில் பயின்ற போதகர்களுக்கு சமர்ப்பணம்

AG தமிழ் நாடு வேதாகம கல்லூரியில் பயின்ற போதகர்களுக்கு சமர்ப்பணம். 👇👇👇🔻🔺🔻🔺🔻🔺🔻🔺தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்து வந்தோம்…தமிழ்நாடு வேதாகம பள்ளியில் சங்கமித்தோம்.

மூன்று ஆண்டுகள் ஒட்டிக்கொண்டோம் – முட்டிக்கொண்டோம்,மோதிக்கொண்டோம்..

மெஸ்ஸில் வயிறை வளர்த்தோம்,வகுப்பறையில் வேத அறிவை வளர்த்தோம்..நூலகத்தில் சிந்தையில் தெளிவை வளர்த்தோம்.. சிற்றாலயத்தில் தேவ உறவை வளர்த்தோம்..ஆனால்……………..இந்த எல்லா இடத்திலும் நம் நட்பை வளர்த்தோம்…

ஒன்றாய் சாப்பிட்டோம்உறங்கினோம், நடந்தோம், திரிந்தோம்,விளையாடினோம்,ஆடினோம், பாடினோம் இறையியல் பயில சென்ற இடத்தில் கூடுதலாக நட்புயியல் பயின்றோம்

முடிவிலே அந்த நாள் வந்தது… பட்டம் பெற்றோம் – தேவ திட்டம் பெற்றோம்… கனத்த இதயத்துடன் ஒருவருக்கொருவர் விடையும் பெற்றோம்

சிலர் வந்த இடமே திரும்பினோம்…சிலர் தந்த இடம் சென்றோம்… அன்று தமிழ் நாட்டின் பல ஊர்களில் இருந்து வந்தோம்… இன்று நம் நட்பின் மூலமாய் தமிழகமே ஒரே ஊராய் மாறிப்போனது…

என்ன ஒன்று…!!அன்று நாம் பிரியும் போது கைப்பேசி இல்லை, ஸ்கைப் இல்லை, வாட்ஸ்அப் இல்லை, ஜூம் மும் இல்லை… ஆனால் தொட்டு விட, தொடர்பு கொள்ள துடித்தோம்…. இன்றோவிரலசைவில் பேச, முகம் பார்க்க வசதிகள் உண்டு ….ஆனால்…. !!!???? – உங்களில் ஒருவன்

தைரியமாயிரு

கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக.. 2சாமுவேல் 10:12

கலங்கி போய் இருக்கிறீங்களா… மனதில் அமைதி இல்லாமல் காணப்படுறீர்களா… என் காரியத்தை குறித்து யார் எனக்காக செயல்படுவார்கள் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறீர்களா..மனம் தளர்ந்து சோர்ந்து போய் இருக்கிறீங்களா.. கவலைப்படாதீங்க.. உங்கள் பார்த்து ஆண்டவர் சொல்லுகிறார்..தைரியமாயிரு என்று ஆண்டவர் உரிமையோடு உங்களை பார்த்து சொல்லுகிறார்..நீங்க நன்றாக இருக்க வேண்டும் என்று மனிதன் நினைக்க மாட்டான் ஆனால் நீங்க நன்றாக இருக்கவேண்டும் நன்றாக வாழவேண்டும் என்று நினைக்கிறவர் ஆண்டவர் மட்டுமே.. உங்கள் காரியம், தொழில், வேலை, ஊழியம் எல்லாவற்றிலும் நலமானதை செய்வார்.. சோர்ந்து போகாதீங்க.. ஆண்டவரின் பார்வைக்கு நலமானதை உங்க வாழ்க்கையில் செய்வார்.. உங்களை சந்தோஷப்படுத்துவார்.. ஆண்டவரை மாத்திரம் நோக்கி கூப்பிடுங்க.செல்வின் 👉🏻

ஆசீர்வாதங்கள்

ஆதி-26:1-35.இதில் ஈசாக்கு பெற்றமூன்று ஆசீர்வாதங்கள்உள்ளது.நாமும் அவைகளைப் பெற்றுக்கொள்ளதேவன் கிருபை செய்வாராக!

1-நூறு மடங்கு ஆசீர்வாதம்-ஆதி-26:12,1-13.இங்கே ஈசாக்கு நூறுமடங்கு பலன் அடைந்ததாக வேதம் கூறுகிறது.இதற்குக் காரணம்கர்த்தர் சொன்ன தேசத்தில் அவன் குடியிருந்தான்.ஆதி-26:1-6.இன்று நாமும் கர்த்தர்சொல்லுகிற இடத்தில்குடியிருக்கும்போதுநிச்சயம் நூறு மடங்குபலன் அடையலாம்.பஞ்சம் வந்தவுடன் வேறு இடங்களுக்குச்சென்றுவிட வேண்டாம்.

2-விட்டுக்கொடுத்தான்.ஆதி-26:14-22.இங்கே ஈசாக்கு பலதுன்பங்களை அனுபவிக்கிறான்.ஆனாலும்அவன் அந்த இடத்தைவிட்டு வேறு இடத்திற்குசென்றுவிடுகிறான்.மேலும் அவன் வேலைக்காரர்கள் தோண்டிய பலதுரவுகளை பிறர் வந்துசொந்தம் கொண்டாடியபோது அப்படியே விட்டுவிடுகிறான்.கடைசியில்தேவன் அவனுக்கு ஒருரெகொபோத்தைக்கொடுத்தார்.அங்கே அவன் பலுகிப் பெருகினான்.அங்கே கர்த்தர்அவனோடு பேசினார்.ஆதி-26:24,25.நாமும் பிறருக்கு விட்டுக்கொடுப்போம்.அப்பொழுது தேவன்நம்மை ஆசீர்வதிப்பார்.

3-சத்துருக்களோடும்சமாதானம் செய்தான்.ஆதி-26:26-31.இங்கே அபிமெலேக்கும்அவன் மனிதர்களும்ஈராக்கிடம் வந்து உடன்படிக்கை செய்கின்றனர்.இவன் ஈசாக்கைத் துரத்திவிட்டவன்.ஆதி-26:13-18.ஆனாலும் ஈசாக்கு அவர்களை ஏற்றுக்கொண்டுஅவர்களுடன் சமாதானமாக இருந்தான்.அன்றேஈசாக்கின் வேலைக்காரர்கள் புதிய துரவுகளைவெட்டினார்கள்.இதுவேபெயெர்சபாவின் ஆசீர்வாதமாகும்.ஆமென்.மத்-5:44-48-ன்படி நாமும்சத்துருக்களை சிநேகிப்போம்.பரமபிதாவின்ஆசீர்வாதங்களைப்பெற்றுக் கொள்வோம்.அல்லேலூயா!

மோகன்ராஜ் -உடன்குடி9965253726

பாலுணர்வும், பரிசுத்த வாழ்க்கையும்!

பாலுணர்வும், பரிசுத்த வாழ்க்கையும்!பாலுணர்வு இறைவனால் மனிதனுக்கு தரப்பட்ட அவசியமான ஒரு வரப்பிரசாதம். அது தூய்மையான ஒரு உணர்ச்சி! ஆனால் இறைவன் அமைத்த திருமண விதிகளுக்கு விலகிப்போய் அதனை உபயோகித்தால் அது அசுத்தத்திற்கு வழி வகுக்கும்.பாலுணர்வு ஓடுகின்ற வெள்ளம் போன்றது. அதனை அடக்கி விட நினைப்பது ஆபத்து. ஆனால் கிறிஸ்து அமைத்த வழிகளை அறிந்து அதனைக் கரைகட்டி ஒழுங்குபடுத்திவிடலாம்.பாலுணர்வு சிலருக்கு இயற்கையாகவே வேகமாக இருக்கும். அதற்காக அவர்கள் மோசமானவர்கள் அல்ல! சிலருக்கு இயற்கையாகவே அது குறைவாய் இருக்கும். அதற்காக அவர்கள் மிக நல்லவர்கள் அல்ல.சிலருக்கு ஐம்பதுகளில் பாலுணர்வின் வேகம் தணிந்து விடும். சிலருக்கு அறுபது எழுபது தாண்டினாலும் வேகம் குறைவது இல்லை அது இயற்கை அது பாவமல்ல.இயற்கையாகவே ஆண்களை எளிதில் கவரும் ஆற்றல் பெற்றவர்கள் பெண்கள், பெண்மையினால் எளிதில் இழுக்கப்படும் பலவீனமுடையவர்கள் ஆண்கள்.கிறிஸ்துவோடு நெருங்கி வாழ்வது, ஜெபங்கள், தியானம் இவைகள் மூலம் பல ஆகாத சுபாவங்கள் நம்மை விட்டு அகலும். ஆனாலும் பாலுணர்வு வேகம் குறைவது இல்லை. என்றால் அது பசி, தாகம் போன்று அவசியமான ஒன்று. அகற்றுவதற்காக தேவன் அதை நமக்குத் தரவில்லை. ஆனால், அது நம்மை ஆட்டிப்படைக்கும் எஜமானாக மாறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஒரு ஆடவனை பெண் பார்க்கும்போதும், ஒரு பெண்ணை ஆடவன் பார்க்கும் போதும் தானாகவே சில வேளை காம உணர்வு ஏற்படுவது இயற்கை. அது பாவமல்ல! அந்த இழுக்கும் சக்திகளும் ஈர்ப்பு விசைகளும் செயல்படுவதால் தான் திருமணங்கள் நடைபெறுகின்றன! ஆனால் அந்த உணர்வுகளுக்கு ஆட்பட்டு கற்பனையிலும் விலகிய சிந்தனைகளில் மூழ்கிக் கறைபடாமலிருக்க உஷாராக இருக்க வேண்டும்.விசுவாசிகளையும், ஊழியர்களையும் நெடுங்காலம் தொந்தரவு செய்யும் ஒரு சக்தி பாலுணர்வுக்கு உண்டு! பாலுணர்வின் விசைகளுக்கு நடுவில் பக்குவமாக வாழப்பழகாவிட்டால் விசுவாச வீழ்ச்சிகள் எந்த வேலையிலும் நடக்கும் அபாயம் உண்டு.பல நிலைகளில் பாவத்தின் வல்லமையை முறியடித்த வெற்றி மிக்க ஊழியர்கள் பலரை பிசாசானவன் பாலுணர்வின் வழியாக தந்திரமாக வீழ்த்தியிருக்கிறான்.பிற பாலினத்தாரோடு நெருங்கிப் பழக விரும்புதல், அதுபோன்ற நிலைகளில் தன்னுடைய கட்டுப்பாட்டின் சக்தியை அதிகமாக நம்புதல், போன்ற காரியங்களால் பாலுணர்வு பாவங்களால் வீழ்ந்துவிடும் வாய்ப்புகள் உண்டு.தங்கள் உடலின் பெரும் பகுதியை உலகத்திற்குக் காண்பிக்க விரும்புகின்ற பெண்கள், கவர்ச்சியாக காணப்பட விரும்பும் பெண்கள் ஆகியோர் பரிசுத்தப் பாதையில் செல்கின்றவர்களுக்கு பெருத்த இடறல்களாக இருப்பார்கள்.பிற பாலினரோடு பழகுதல் தவறல்ல. ஆனால் எளிதில் வித்தியாசமான உணர்வுகளால் உந்தப்பட்டு, தவறான பாதைகளில் சென்றுவிடும் பலவீனம் தனக்கு உண்டு என்ற விழிப்புணர்வோடு பழக வேண்டும்.விசுவாசிகளும், ஊழியர்களும் தங்களுக்கென்று வலுவான வரம்புகளை உருவாக்கி அதற்குள் ஜாக்கிரதையாக நடக்கத் தவறினால் தப்புவது கடினம், தப்பினாலும் தீயிலிருந்து உயிர் தப்பியது போலவே இருக்கும்.பிற பாலினத்தவரோடு மனம் விட்டு ஆழமாகப் பேச விரும்புதல், அல்லது மற்றவரின் மனதை அறிய விரும்புதல் போன்றவற்றை முதலிலேயே தவிர்க்கக் கவனமாயிருக்க வேண்டும். தங்களை அறியாமலே ஒருவிதமான உணர்வு இருவருக்கோ அல்லது ஒருவருக்கு மட்டுமோ தோன்ற ஆரம்பிக்கும். அதன் விளைவாக ஒருவருக்கொருவர் மிக முக்கியமானவர்களாக மாற நேரிடும். இறுதியில் பிரிக்கமுடியாத ஒரு பிணைப்பு ஏற்பட்டுவிடும். விபரீத விளைவுகள் அதனால் வரும்.60 வயது கடந்து விட்ட நிலையில் பாலஸ்தீனிய யாசர் அரபாத் தன்னுடைய 23 வயது பெண் உதவியாளரை மணந்து கொண்டார். 30க்கு மேற்பட்ட பேரப்பிள்ளைகளை கண்ட பின்னர் காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ராமராவ் தன்னிலும் 32 வயது குறைந்த திருமணமான ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார் காரணம் என்ன? நெருக்கங்கள் பெருகும்போது விட்டுப் பிரிய விரும்பாத ஒரு மனப்பிரச்சனை ஏற்படுவது இயற்கை. எனவே ஆரம்பத்திலிருந்தே பிற பாலினரோடு உள்ள பழக்கங்களை வரம்புகளுக்குள் நிறுத்த வேண்டும்.பிறபாலினத்தவரோடு ஏற்பட்ட பழக்கம் பிரிந்து போக முடியாத நிலைக்கு வரும்போது தன் செயலை நியாயப்படுத்தும் உணர்வு அதிகமாகும். அதன் பின்பு அவர்களை திருப்புவது கடினம். எனவே விசுவாசிகளும் ஊழியர்களும் அந்த நிலைக்குப் போகும் முன்பே தங்களைச் சரிசெய்து கொள்ளவேண்டும்.தனியாக பெண்கள் இருக்கும்போது, நெடுநேரம் பேசுதல், ஜெபித்தல், வேடிக்கை பேசுதல் போன்றவற்றை ஊழியர்கள் தவிர்க்க வேண்டும். அது போன்ற நேரங்களில் வீடு சந்திப்பைத் தவிர்க்க வேண்டும். வீணாகப் போய் ஏன் சாத்தானின் கண்ணிகளில் விழவேண்டும்.திருமணமான, திருமணமாகாத பெண்களைத் தனியாக ஊழியர்கள் எந்த ஊழியங்களுக்கும் அழைத்துச் செல்லக் கூடாது.ஒரு ஊழியர் அல்லது விசுவாசி பிறபாலினத்தவரோடு உள்ள நட்பு பிறர் பார்வையில் தவறாகத் தோன்றினால் காலதாமதமின்றி தேவையான இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.ஊழியரானாலும் விசுவாசியானலும் கர்த்தருக்குரிய காரியங்களில் ஈடுபடத் தங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும்.தேவனுடைய வார்த்தைகளால் இருதயத்தை நிரப்புதல், தொய்வில்லா ஜெபவாழ்க்கை, தேவப்பிரசன்னத்தில் வாழ்தல் ஆகிய அனுபவங்களால், பாலுணர்வுப் பாவங்களுக்குள் விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளலாம். ஆமென்!கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே.நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல்,உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.(#I_தெசலோனிக்கேயர் 4:2-8) ஆமென்!! அல்லேலூயா!!!

கிறிஸ்துவின் பணியில்:- ஜாஷ்வா ( Joshua )Nanenallameyppar

தானியேல் நூல் – ஒரு அற்புதமான பெட்டகம்

விவிலியத்திலுள்ள பிரபலமான புத்தகங்களின் பட்டியலைப் போட்டால் தானியேல் நூலும் தவறாமல் இடம் பிடிக்கும். நிறைய ஆச்சரியங்களாலும், வியப்பூட்டும் நிகழ்வுகளாலும், குறியீடுகளாலும் நிரம்பியிருக்கும் நூல் என தானியேல் நூலைச் சொல்லலாம்.

இஸ்ரேல் மக்கள் நாடுகடத்தப்பட்ட போது அவர்களோடு பாபிலோன் நாட்டுக்கு வந்தவர் தான் தானியேல். அப்போது கொடுங்கோலன் நெபுகத்நேசர் ஆட்சியில் இருக்கிறார்.

தானியேல் பாபிலோனில் இறைவனுக்கு சாட்சியான ஒரு வாழ்க்கையை வாழ்கிறார், அங்குள்ள மக்களையும் இறைவனின் அருஞ்செயல்களைக் காண வைக்கிறார். மக்கள் இறைவனை நாடி வர காரணமாகிறார் என்பது இந்த நூலின் ஒரு வரிச் செய்தி எனலாம்.

எபிரேய மொழியிலும், அரேமிய மொழியிலும், கிரேக்க மொழியிலும் என மூன்று மொழிகளில் கலந்து எழுதப்பட்ட நூல் தானியேல். விவிலியத்தில் மொத்தம் 735 எதிர்கால தீர்க்கதரிசனங்கள் உண்டு. அதில் 166 தானியேல் நூலில் இடம்பெற்றிருக்கிறது என்பது வியப்பான விஷயம். இதில் பெரும்பாலானவை குறியீடுகள்.

கிமு 605, 606 களில் தானியேல் பாபிலோனுக்கு கொண்டு வரப்படுகிறார். அரசவையில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவரும் அவருடைய மூன்று நண்பர்களும் அங்கே பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு பாபிலோனிய பெயர்கள் வழங்கப்படுகின்றன. பெயர்களை மாற்றிக் கொண்டாலும் இறைவனை மாற்றிக் கொள்ளவில்லை அவர்கள். இறைவன் தந்த கட்டளைகளைக் கடைபிடித்து வாழ்கின்றனர்.

இந்த நூல் தானியேலின் 75 ஆண்டு கால வாழ்க்கையையும், இஸ்ரேல் மக்களின் 440 ஆண்டு கால வரலாற்றையும் பதிவு செய்கிறது. தானியேல் நூலில் பன்னிரண்டு அதிகாரங்கள் உள்ளன. முதல் ஆறு அதிகாரங்களும் எளிமையாகவும், வியப்பூட்டும் அற்புதங்களாலும் நிரம்பியிருக்கின்றன.

ஒரு நிகழ்வில் மன்னன் நெபுகத்நேசர் ஒரு கனவு காண்கிறார். பொதுவாக கனவுக்கு விளக்கம் கேட்கத் தான் அறிஞர்களை அழைப்பார்கள். இங்கே கொஞ்சம் வித்தியாசமாக மன்னன் ஒரு கட்டளை இடுகிறார். அறிஞர்கள் மன்னர் கண்ட கனவையும் சொல்ல வேண்டும், அதன் பலனையும் சொல்ல வேன்டும். யாராலும் விடுவிக்க முடியாத இந்தப் புதிரை தானியேல் விடுவித்தார். கனவையும் சொல்லி அதன் பலனையும் அவர் விளக்கினார். அந்தக் கனவு கடவுளால் நெபுகத்நேசருக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை. அரசுகளை அமைப்பதும், கலைப்பதும் என்னால் ஆகும் என்பதை இறைவன் இந்த கனவின் மூலம் மன்னருக்குப் புரிய வைக்கிறார்.

இன்னொரு நிகழ்வில், மன்னன் தன்னுடைய பொற்சிலை ஒன்றை வடிக்கிறான். அது 90 அடி உயரமும், ஒன்பது அடி அகலமும் உடையது. அதை மக்கள் எல்லோரும் வணங்க வேண்டும் என்பது அரச கட்டளை. எல்லோரும் கட்டளைகளுக்குக் கட்டுப்படுகிறார்கள். ஆனால் தானியேலின் நண்பர்கள் “சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ” ஆகியோர் மன்னனை வணங்காமல் கடவுளை மட்டுமே வணங்குகின்றனர். அதனால் கோபமுற்ற மன்னன் அவர்களுக்கு ஒரு கடைசி வாய்ப்பை வழங்குகிறார். அவர்களோ அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

வழக்கத்தை விட ஏழு மடங்கு சூடான நெருப்புச் சூளையில் அவர்கள் எறியப்பட்டனர். அவர்களை நெருப்பில் எறியச் சென்றவர்கள் அந்த வெப்பத்தில் கருகி இறந்தனர். ஆனால் நெருப்புக்குள் விழுந்தவர்களோ நெருப்பின் நடுவே இறைவனோடு உலவினார்கள். அதிர்ந்து போன மன்னன், இவர்களின் கடவுளே உண்மைக் கடவுள் என பிரகடனம் செய்தான்.

இன்னொரு கனவில் ஒரு மிகப்பெரிய மரம் வானளாவ வளர்ந்து நிற்கிறது. எல்லா வித விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அது நிழலும், கனியும் தருகிறது. அது பின்னர் கடவுளின் தூதனால் வெட்டி வீழ்த்தப்படுகிறது. ஆனாலும் அதன் அடிமரம் மட்டும் விட்டு வைக்கப்படுகிறது. ஏழு ஆண்டுகள் அது அப்படியே இருக்கும் என உரைக்கப்படுகிறது. அதன் விளக்கத்தையும் தானியேலால் மட்டுமே கூற முடிந்தது.

கனவின் படி மன்னனே அந்த மரம். மன்னன் வீழ்வான். ஏழு ஆண்டுகள் அவன் விலங்கைப் போல அலைவான். புல் தின்று, பனியில் நனைந்து ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவனாய் வாழ்வான். ஏழு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அரசு அவனுக்குக் கிடைக்கும். தானியேலின் விளக்கத்தின் படியே அனைத்தும் நடந்தன.

இன்னொரு முக்கியமான நிகழ்வில் மன்னனை வழிபட மறுத்த தானியேல் சிங்கத்தின் குகையில் வீசப்படுகிறார். அப்போது மன்னனாய் இருந்தவர் தாரியு. தானியேலின் வயது 90 ! தானியேல் சிங்கத்தின் குகைக்குள் அமைதியாய் துயில்கிறார் சிங்கங்கள் அவரை எதுவும் செய்யவில்லை. மறுநாள் எல்லோரும் வியப்படைகின்றனர். தானியேலின் மீது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்போது குகையில் எறியப்படுகின்றனர். தரையை அடையும் முன் சிங்கங்கள் அவர்களைக் கவ்விக் கிழிக்கின்றன !

இரண்டாம் பாகமான ஏழு முதல் 12 வரையிலான அதிகாரங்கள் கொஞ்சம் கடினமான குறியீடுகளால் ஆனது. அவை மிகப்பெரிய இறையியல் சிந்தனைகளும், துல்லியமான எதிர்கால தீர்க்கத்தரிசனங்களும் அடங்கியது.

மொத்தத்தில், தானியேல் நூல் இறைவனின் வலிமையையும், திட்டங்களையும் விளக்கும் ஒரு அற்புதமான பெட்டகம்

Thanks to Bro. Xavior

வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் இறைவனே – சாத்ராக், மேஷாக், ஆபத்நெகோ

காட்சி 1

(மன்னர் நெபுகத்நேசர் அமர்ந்திருக்கிறார். அருகில் அமைச்சர் )

மன்னர் : அமைச்சரே, எல்லா ஏற்பாடுகளும் தயாரா ? எல்லோரும் வந்திருக்கிறார்களா ?

அமைச்சர் : எல்லாரும் வந்திருக்கிறார்கள் அரசே.

மன்னர் : அவர்கள் தயாரா ? அவர்களுக்கு நல்ல ஆடைகள் கொடுத்து அரச மரியாதையுடன் அழைத்து வரவேண்டும்.

அமைச்சர் : அவர்கள் தயாராக இருக்கிறார்கள் அரசே. தாங்கள் அழைத்ததும் இங்கே வருவார்கள்.

மன்னர் : நல்லது. நல்லது.

மன்னர் : என் முன்னால் கூடியிருக்கும் உங்களுக்கெல்லாம் ஒரு அதிசயத்தைக் காட்ட விரும்புகிறேன். அதற்காகத் தான் எல்லோரையும் இங்கே கூடி வரச் செய்திருக்கிறேன். நம்ப முடியாத, ஆனால் நம்பியே ஆகவேண்டிய நிகழ்ச்சி இது.

அமைச்சரே.. அவர்களை வரச் சொல்லுங்கள்.

( அவர்கள் மூவரும் வருகின்றனர் )

மன்னர் : இவர்கள் தான் அந்த அதிசயப் பிறவிகள். நேற்று இவர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி இவர்கள் கூறுவார்கள்.

விருந்தினர் ஒருவர் : இவர்கள் அதிசயப் பிறவிகளா ? இவர்களைத் தான் நமக்குத் தெரியுமே ? யூதா நாட்டிலிருந்து அடிமைகளாய் கொண்டு வரப்பட்டவர்கள். உமது கருணையினால் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்.

மன்னர் : யூதா நாட்டு மக்கள் தான். ஆனால் ரொம்ப வித்தியாசமானவர்கள்.

விருந் : ஆம். அதனால் தானே நீங்கள் அவர்களுக்கு உயர் பதவிகள் கொடுத்து கௌரவித்திருக்கிறீர்கள். பாபிலோனில் பிற பகுதிகளுக்கு பொறுப்பாளர்களாய் ஆக்கியிருக்கிறீர். இவர்கள் பெயர்கள் கூட சாத்ராக், மேஷாக், ஆபெத்நெகோ தானே ? அப்படி என்ன அதிசயப் பிறவிகள் இவர்கள் ?

மன்னர் : நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான். நேற்று இவர்கள் நெருப்பில் எறியப்பட்டார்கள் என்பது தெரியுமா ?

விருந் : என்னது நெருப்பில் எறியப்பட்டார்களா ? அப்படியானால் இவர்கள் ஆவிகளா ( அய்யோ.. ஆனா கால் இருக்கே )

மன்னர் : ஹா..ஹா.. அவர்களே பேசட்டும்…( அவர்களைப் பார்த்து ) . நீங்களே சொல்லுங்கள்.

சாத்ராக் : மன்னரே வணக்கம். உமக்கே தெரியும், எங்களுடைய வேலையில் நாங்கள் குறை வைத்ததில்லை. கடமைகளிலிருந்து தவறியதில்லை. உமக்குரிய மரியாதையை உமக்குத் தர தவறியதே இல்லை.

மேஷாக் : ஆனால்.. கடவுளைப் பொறுத்தமட்டில், எங்களுடைய வாழும் கடவுளை எங்கும் விட்டுக் கொடுப்பதும் இல்லை. யாவே யைத் தவிர எந்தக் கடவுளையும் நாங்கள் வணங்குவதில்லை. இதை நாங்கள் சிறு வயது முதலே கடைபிடித்து வருகிறோம்.

ஆபெத் : அப்போது தான் பொற்சிலை ஒன்றை நீங்கள் நிறுவினீர்கள். அறுபது முழ உயரம், ஆறு முழ அகலம் என அது பிரமாண்டமாய் இருந்தது. தூரா சமவெளியில் அதை நிறுவினீர்.

சாத்ராக் : உண்மையிலேயே அது பிரமிப்பூட்டும் அளவிலான சிலை தான். ஆனால் அது தெய்வமில்லையே ! கைகளால் செய்யப்படும் எதுவும் தெய்வங்களல்லவே. ஆனால் மன்னரே, நீரோ அதை வணங்கச் சொன்னீர்.

மேஷாக் : அதுவும் எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் போன்ற கருவிகளெல்லாம் இசைக்கத் துவங்கும் பொழுதில் தாழ விழுந்து வணங்கச் சொன்னீர். அதில் எங்களுக்கு உடன்பாடில்லை.

ஆபெத் : மன்னருடைய கட்டளையா ? கடவுளுடைய கட்டளையா எனும் கேள்வி எழும்போது கடவுளுடைய கட்டளை என முடிவெடுப்பது தானே நல்லது. அதனால்தான் அரசே நாங்கள் அதை வணங்கவில்லை.

சாத்ராக் : இது மன்னரை அவமானப்படுத்தும் நோக்கமல்ல. எங்கள் கடவுளை மகிமைப்படுத்தும் நோக்கம் மட்டுமே. மன்னர் எங்கள் பெருமதிப்புக்குரியவர், ஆனால் கடவுள் எங்கள் வணக்கத்துக்கும், மகிமைக்கும், தொழுதலுக்கும் உரியவர்.

விருந்தினர் : நில்லுங்க..நில்லுங்க..நில்லுங்க… இந்த சாம்ராஜ்யத்தின் மாபெரும் மன்னர் ! படைகளுக்கு அஞ்சாதவர், பகைவரை துயில விடாதவர் அவருடைய கட்டளையை மீறினீர்களா ? என்ன தைரியம் உங்களுக்கு ! உங்களை கொலை செய்வது தான் சரியானது.

சாத்ராக் : ஐயா.. மன்னிக்க வேண்டும். வாழும் கடவுளை வழிபடாமல் எப்படி வெறும் சிலையை நாங்கள் வழிபட முடியும் ? அந்தச் சிலைகளால் எதுவும் செய்ய முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்.

விருந்தினர் : என்ன தெரியும் உங்களுக்கு ? மன்னரின் கடவுளை அவமானப்படுத்துவது உங்கள் நோக்கமா ?

சாத்ராக் : அவமானப்படுத்துவதல்ல, விலகி நிற்பதே எங்கள் விருப்பம். உங்கள் சிலைகளின் நாக்குகள் மனிதர்களால் உருவானவை, அவற்றால் பேச முடியுமா ? பொய் வெள்ளியால் புனையப்பட்டாலும் அவை போலியானவை தானே.

மேஷாக் : நீங்கள் என்னதான் புனிதமாய் ஒரு சிலையைச் செய்தாலும், அதை பூச்சி அரித்தாலோ, துரு பிடித்தாலோ அந்தத் தெய்வங்களால் அதைத் தட்டி விட முடியுமா ?

ஆபெத் : பட்டாடைகளை அவை அணிந்திருந்தாலும், புழுதி படிந்த முகத்தை அவற்றால் துடைத்து விட முடியுமா ? மனிதர்கள் தானே துடைத்து விட வேண்டும் ?

சாத்ராக் : அந்தச் சிலை மனிதர்களைக் காப்பது இருக்கட்டும், தங்களையே காத்துக் கொள்ள அவற்றால் முடியுமா ? யாரேனும் கவர்ந்து சென்றால் சண்டையிட்டு தன்னை மீட்டுக் கொள்ளுமா ?

மேஷாக் : நூற்றுக்கணக்கான விளக்குகளை அவற்றின் முன்னால் ஏற்றி வைத்தாலும், ஒன்றையேனும் அவற்றால் காண முடியுமா ?

ஆபெத் : பலியிலால் எழுகின்ற புகை அவற்றின் மேனியில் படிகிறதே, பறந்து திரிகின்ற வவ்வால் கூட அதன் தோளில் அமர்ந்து எச்சமிடுகிறதே, புழுக்கள் கூட உள்ளே புகுந்து அரித்து அழிக்கிறதே.. எதையேனும் அந்தச் சிலையினால் தடுக்க முடியுமா ?

சாத்ராக் : எதையுமே அவற்றால் செய்ய முடியாது. படைப்புக்கும், படைத்தவருக்கும் உள்ள வித்தியாசம் இது தான். காலில்லாத சிலைகளை மனிதர்களே தூக்கிச் சுமக்க வேண்டும். கீழே விழுந்தால் கூட அவற்றால் எழுந்து நிற்க முடியாது, மனிதர்களே அவற்றைத் தூக்கி நிறுத்த வேண்டும். அந்த சிலையின் மேலுள்ள அணிகலன்களை யாரேனும் திருடிச் சென்றால் கூட அதற்குத் தெரியாது. எனவே தான் அவற்றை நாங்கள் வழிபடவில்லை.

மேஷாக் : வார்க்கப்படும் போதும் உணர்வின்றிக் கிடந்தவை அவை. வழிபடும் போதும் உணர்வின்றிக் கிடப்பவை அவை. அவற்றை நாங்கள் ஏன் வழிபடவேண்டும். எனவே தான் அதை நிராகரித்தோம்.

ஆபெத் : இறப்பிலிருந்து ஒருவரை விடுவிக்கவோ, நோயிலிருந்து ஒருவரை மீட்கவோ, கைம்பெண் ஒருத்திக்கு இரக்கம் காட்டவோ அவற்றால் முடியாது. எனவே தான் அவற்றை வழிபடவில்லை.

விருந்தினர் : இவ்வளவு பேசும் உங்களை கொல்லாமல் எப்படி விட்டு வைத்திருக்கிறார் மன்னர் ? மன்னரும் யூதராக மாறிப் போனாரோ ?

மன்னர் : அவர்கள் சிலையை வழிபடவில்லை என்பதால் கடும் கோபம் கொண்டேன். அவர்களை அழைத்து மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தேன். அவர்கள் வளைந்து கொடுக்கவில்லை, அவர்களுடைய இறைவனை விட்டுக் கொடுக்கவில்லை. எங்கள் கடவுள் எங்களைக் காப்பார். அவர் ஒருவேளை காப்பாற்றாமல் போனால் கூட அவரையே வழிபடுவோம். என்று தீர்க்கமாய்ச் சொன்னார்கள். அதனால் தான் வெகுண்டெழுந்து அவர்களை நெருப்பில் எறிந்தேன்.

விருந்தினர் : இது தான் எனக்குப் புரியவில்லை. நெருப்பில் எறிந்தபின் எப்படி அவர்கள் வெளியே வந்தனர் ? கட்டிப் போடவில்லையா ?

சாத்ராக் : எங்களைக் கட்டினார்கள். உடைகளோடு சேர்ந்து கட்டினார்கள். சட்டென தீப்பிடிக்கும் என்றே நாங்களும் நினைத்தோம். அதிர்ச்சியடைந்தோம். கடவுளை வேண்டினோம்.

மேஷாக் : தீச்சூளையை வழக்கத்தை விட ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடேற்றினார்கள். எங்களை நெருப்புக்குள் எறியச் சென்ற கல்தேயரை நெருப்பு சுட்டுப் பொசுக்கியது. அவர்கள் இறந்தே போனார்கள்.

ஆபெத் : நாங்கள் நெருப்புக்குள் எறியப்பட்டதும் பதறினோம், கதறினோம். ஆனால் சட்டென அதிசயத்துப் போனோம். எங்களுக்கு எதுவும் நேரவில்லை. என்ன நடக்கிறதென்று தெரியவில்லை. பயந்தோம், வியந்தோம்.

அமைச்சர்: நாங்கள் பார்த்துக் கொண்டே இருந்தோம். எங்களால் நம்ப முடியவில்லை. சட்டென கருகி விடுவார்கள் என நினைத்தால், இவர்கள் உள்ளே அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள். உடனே வீரர்களுக்குக் கட்டளையிட்டேன். அவர்கள் சூடநீர், கீல், சணற்கூளம், சுள்ளிகள் போன்றவற்றை அதிகமாய் சூளையில் போட்டு தீயை அதிகரித்தார்கள்.

விருந்தினர் : அப்புறம் என்னாச்சு ? அப்படியும் இவர்கள் சாகவில்லையா ?

அமைச்சர் : செத்திருந்தால் இங்கே நின்றிருப்பார்களா என்ன ? நெருப்பு வானளாவ உயர்ந்தது. சுமார் நாற்பத்தொன்பது முழம் அளவுக்கு நெருப்பு வானில் எழுந்தது. இருந்தாலும் இவர்கள் சாகவில்லை. திடீரென பாடல் சத்தம் கேட்டது.

விருந்தினரா : பாடலா ? நெருப்பின் நடுவே பாடலா ?

சாத்ராக் : மோசேயின் முன்னால் எரிந்த பச்சை மரம் கருகவில்லை. அதே போல எங்களைச் சுற்றி எரிந்த நெருப்பு எங்களைப் பொசுக்கவில்லை. நாங்கள் அமைதியாக நின்றோம். எங்களைச் சுற்றி குளிந்த காற்று வீசத் தொடங்கியது. காண்பது கனவா என நினைத்தோம். அப்போது தான் அது நிகழ்ந்தது.

மேஷாக் : ஆம்.. எங்களோடு கூட இன்னொருவரும் உள்ளே வந்தார். அவர் தான் கடவுளின் தூதர். தெய்வ மகனாய் கூட இருக்கலாம். அவர் எங்கள் நடுவே வந்ததும் எங்களுக்கு எல்லாமே மறந்து போய்விட்டது. துதிக்க ஆரம்பித்தோம்.

ஆபெத்நெகோ : “ஆண்டவரின் அனைத்துச் செயல்களே.. கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்” என பாடல் பாடினோம். ஒவ்வொன்றாய் அழைத்து இறைவனைத் துதித்தோம். நேரம் போனதே தெரியவில்லை. என்ன நடக்கிறதென்றும் தெரியவில்லை.

மன்னர் : உண்மை தான்.. நெருப்புக்குள் மூன்று பேரைப் போட்டோம், ஆனால் நான்காவதாக ஒருவர் இருப்பதை நாங்கள் எங்கள் கண்காலேயே கண்டோம். யாருக்கும் எந்தத் தீங்கும் நேரவில்லை. நான்காவது நபர் கடவுளின் மகனைப் போல தோற்றமளித்தார்.

சாத்ராக் : அப்போது மன்னனில் குரல் வெளியிலிருந்து கேட்டது. “உன்னதக் கடவுளின் ஊழியர்களாகிய சாத்ராக்கு! மேசாக்கு, ஆபேத்நெகோ வெளியே வாருங்கள்” என்றது மன்னனின் குரல். நாங்கள் தூதரைப் பார்த்தோம். அவர் புன்னகையுடன், செல்லுங்கள். உங்களால் நாட்டில் மாற்றம் உருவாகும். உங்கள் பெயர் காலம் காலமாய் நிலைக்கும் என்றார்.

மேஷாக் : நாங்களோ, எங்கள் பெயரல்ல கடவுளே உமது பெயரே போற்றப்படுக என்றோம். பிறகு வெளியே வந்தோம்.

ஆபெத்நெகோ : எந்தக் காயமும் இல்லாமல் வெளியே வந்தோம். எங்களாலேயே நம்ப முடியவில்லை.

விருந்தினர் : நீங்கள் சொல்லும் எதுவுமே நம்ப முடியவில்லையே. உங்கள் முடி கூட கருகினது போல தெரியவில்லை. ஒரு தீக்காயமும் காண முடியவில்லை. பளிச் என இருக்கிறீர்கள்.

மன்னர் : ஆம்.. நம்ப முடியாத அதிசயம் தான் அது. அதனால் தான் அவர்களை உங்கள் முன்னால் நிற்க வைத்து பேசவைத்தேன். நேற்றைக்கே நான் சட்டம் இயற்றிவிட்டேன்.

விருந்தினர் : என்னவென்று ?

மன்னர் : இவர்களுடைய கடவுளுக்கு எதிராக யாரும் பழிச்சொல் கூறக் கூடாதென்று. அப்படிக் கூறினால் அவன் கண்டந் துண்டமாய் வெட்டப்படுவான் என்று. அதுமட்டுமல்ல அவனுடைய வீடே அழிக்கப்படும் என்றும் சொன்னேன்.

விருந்தினர் : அப்படி என்ன இவர்களோட கடவுள்…

மன்னர் : அந்தச் சட்டம் உமக்கும் பொருந்தும்..

விருந்தினர் ( சட்டென வாயை மூடிக் கொள்கிறார் ) இல்லை.. நான் பேசவில்லை. அவர்களுடைய கடவுள் வாழ்த்தப்பெறுவாராக.

மன்னர் : சாத்ராக், மேஷாக், ஆபெத்நெகோ.. உங்களுடைய பெயர்களை நான் மாற்றினேன். ஆனால் உங்களுடைய மனதை என்னால் மாற்ற முடியவில்லை. உங்களை யூதாவிலிருந்து இடம் மாற்றினேன். ஆனால் உங்கள் தடத்தை மாற்ற முடியவில்லை. செடியை, நிலம் மாற்றி நட்டாலும் பூவின் நிறம் மாறுவதில்லையே. நீங்கள் இறைவனோடு தொடர்ந்து நடக்கிறீர்கள். அதனால் தான் வேறு எந்த தவறான சிந்தனைகளும் உங்களை அணுகவில்லை.

சாத்ராக் : இறைவனுக்கே மகிமை உண்டாகட்டும். அவர் நாமம் மட்டுமே வாழ்த்தப்பெறட்டும்.

மன்னர் : உங்களுடைய விசுவாசத்தைக் கண்டு நான் வியக்கிறேன். உயிரை துச்சமென மதித்த உங்களுடைய செயல் பிரமிப்பூட்டுகிறது. எந்தச் சூழலிலும் இறைவனை விட்டு விடாத உறுதி என்னை வியப்பிலாழ்த்துகிறது. உங்களுக்கு மாநிலங்களில் பெரிய பதவிகளை அளிக்கிறேன்.

மேஷாக் : நன்றி அரசே. இறைவன் உங்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியதும், அதன் மூலம் மக்கள் உண்மை தெய்வத்தை அறிந்து கொண்டதும் மகிழ்ச்சியான விஷயங்கள். உயர் பதவிகள் எங்களுக்கு முக்கியமல்ல, உயரத்தில் இருக்கின்ற விண்ணக பதவியே முக்கியம்.

மன்னர் : உங்கள் கடவுள் வாழ்த்தப்பெறுவாராக. சென்று வாருங்கள்.

( மூவரும் வணங்கி விடைபெறுகின்றனர் )

பின் குறிப்பு

சாத்ராக் மேஷாக் ஆபெத்நெகோ மூவரும் கடினமான சூழலில் கூட இறைவனை விட்டு விடாமல் பற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை இறைவன் கனம் பண்ணினார். இறைவனோடு தொடர்ந்து நடப்பவர்களை இறைவன் கைவிடுவதில்லை.

Thanks to Bro Xavior